Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, October 3, 2014

சோதிடம் தோன்றியக் காலங்களும், சிலக் குறிப்புகளும்.



              தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
                                அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
                                ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
                                தற்பரன் நின்று தனிநடஞ்ச் செய்யுமே

-திருமூலர்


பண்டையக் கால சோதிடக் குறிப்புகள்


      தமிழ்க் காப்பியங்களில் தலையாயது சிலப்பதிகாரம். ஏன் எனில் மற்ற காப்பியங்கள் எல்லாம், ஒன்று வடமொழி இலக்கியங்களை மறுவடிவு செய்தவை அல்லது கடவுள்களையும் அரசர்களையும் காப்பியத் தலைவர்களாகக் கொண்டு எழுதப்பட்டவை.  ஆனால் முற்றிலும் ஒரு புதியக் களத்தில் ஒரு எளிய வணிகனின் வாழ்வியலை, எளிய நடையில், அரசியல் பிழை, கற்புடை பெண்டிர் வாழ்வு, ஊழ்வினை ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி எழுதப்பட்டது சிலப்பதிகாரம்.

      இதற்கும் சோதிடத்திற்கும் என்ன தொடர்பு? சேர மன்னனின் இரு புதல்வர்களில், இளையோனைக் கண்ட ஒரு நிமித்திகன், இவன் மன்னன் ஆவான் என்று நிமித்திகம் (சோதிடம் என்பதன் தூய தமிழ்ச் சொல்) சொல்ல, மூத்தவனின் முகம் போன போக்கைக் காண முடியாமல், இளையவன் வெகுண்டெழுந்து, ‘நிமித்திகனின் வாக்கைப் பொய்யாக்குவேன்’ என சபதமிட்டு, உடன் சமன முனிவர்களின் உடையனிந்து, துறவியானன். நிமித்திகன் அல்லது சோதிடனின் வாக்கை முதல் அடியிலேயே துவைத்து எடுத்துவன் பெயர்தான் இளங்கோ என்பது நம் அனைவருக்கும் தெரியும்.


பண்டையக் கால சோதிடக் குறிப்புகள்



      இதில் சோதிடம் பொய்த்துப் போனது ஏன் என்பதைவிட, அன்றைய வாழ்வியலோடு சோதிடம் என்பது பின்னிப் பினைந்திருந்தது அறியவருகிறது. அதனினும் குறிப்பிடத்தக்கக் குறிப்பு என்னவெனில், இளங்கோ அடிகள் சமன மதத்தைச் சார்ந்தவர். எனவே மத வேறுபாடின்றி, அனைத்து மதத்தினரின் வாழ்வோடும் சோதிடம் இரண்டறக்கலந்து இருந்திருக்கிறது.

பண்டையக் கால சோதிடக் குறிப்புகள்


      சோதிடத்தின் வரலாறு என்பது புவியியல் சார்ந்தும், அதாவது விரிந்து பரந்து இந்த புவனம் முழுதும் பதியப்பட்டிருக்கிறது. மத வேறுபாடுகளையும் கடந்து சோதிடம் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது.

      மிகச் சுருக்கமாக சிலவற்றைப் பதிவிடுகிறேன். தேவை ஏற்படும்போது, அதன் விரிவினைப் பின்னர் காண்போம்.


*       இராமயணம் – இராமர் கடக இலக்கினத்தில், புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறது.

*       மகாபாரதம் – சூரியனையும் சந்திரனையும் ஒன்றாகச் சந்திக்கச் செய்து, அமாவாசையை முதல் நாளே கண்ணன் உண்டாக்கியதாக செய்தி.

*       கம்ப இராமயணத்தில், வெள்ளிக் கோள் ‘உசனன்’ எனக் குறிப்பிடப்படுகிறது.

*       பட்டினப்பாலை ‘வயங்கு வெண்மீன் திசை’ என வெள்ளிக் கோள் உதிக்கும் திசையைக் குறிக்கிறது.

*       இளங்கோ நிமித்திகனால் துறவியானதாகக் குறிப்பு உள்ளது.

*       சோதிடத்தின் ஒரு கருவான ஊழ்வினையைக் கூறுவது சிலப்பதிகாரம்.

*       சமனர்கள் சோதிடக்கலையைப் பயன்படுத்தியதை சினேந்திர மாலை எனும் நூல் குறிப்பிடுகிறது.

*       கிரேக்கர்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 365 நாட்களுக்கு ஆண்டுக்கணிதம் கணித்துள்ளனர்.

*       இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தர் சோதிடத்தின் பெயரால் நடைபெற்ற மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டித்துள்ளார்.

*       இயேசு பிறக்க இருப்பதை வால் நட்சத்திரத்தின் வழிகாட்டுதலோடு துறவிகள் கண்டதாக பைபிள் கூறுகிறது.

*       ஏழ் உலகங்களைக் கடந்து (ஏழு கோள்கள்?) நபிநாயகம் இறைவனைக் கண்டதாக திருக்குரான் கூறுகிறது.

*       பரமபிதாவின் திருச்சபையில் சொர்க்கத்தில் ஏழு சோதிகள் (கோள்கள்) தெரிந்ததாக பைபிள் கூறுகிறது.

*       மாயன்கள் தங்கெளுக்கென நாட்காட்டி அமைத்து அதில் பலன்களையும் வரைந்துவைத்து பலன் கண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

*       சோதிடர்கள் இளங்கோவிற்குக் கூறியது போலவே, இயேசுவை தேவகுமாரன் யூத ராசா பிறந்திருக்கிறார் எனக் கூறியதால், அன்றைய யூத அரசனால் சிலுவையில் அறையப்பட்டார்.

*       சீனர்கள், விலங்குகளையும், பறவைகளையும் கொண்டு நாட்காட்டி அமைத்து பலன் சொல்லி வருகின்றனர்.

*       கிரேக்கர்களும், யவனர்களும் சோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

*       இப்போதும் மேல் நாட்டினர் எபிமெரிஸ் எனும் பஞ்சாங்கத் துணையுடன், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவற்றையும் கோள்களாகக் கொண்டு சோதிடம் கணித்து வருகின்றனர்.

பண்டையக் கால சோதிடக் குறிப்புகள்


      ஆக சோதிடம் என்பது காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. அதன் நம்பகத்தன்மை மட்டுமே, காலந்தோறும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளது.



No comments: