Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, July 25, 2015

இரட்டைப் பிறவிகளின் சாதகம்



      அடுத்து, இரட்டைப் பிறவிகளின் கால இடைவெளியினைப் பார்ப்போம். இரட்டைப் பிறவி என்பது, எளிதாகக் கூறப்போனால், ஒரே கருமுட்டை இரட்டை நிலையில் வளர்வது அல்லது இரு கருமுட்டைகள் ஒரே நேரத்தில் வளர்வது. சாதகம் என்பது பிறக்கும் நேரத்தினை வைத்துதான் கணிக்கப்படுவதால், கரு உற்பத்தி நிலை பற்றி நாம் இங்கு ஆராயவில்லை. ஆனால் கரு உற்பத்தி நிலை பற்றியும் ஆராய வேண்டும் என்பதே என் கருத்து.

      சரி, இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் கால இடைவெளியினைப் பார்ப்போம். பொதுவாக இரட்டைக் குழந்தைகள் என்பது ஒருவருக்கு ஒரே நாளில் பிறப்பது என்றாலும், ஒரே நேரத்தில் பிறக்கின்றனவா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. இதுபற்றி, வலையில் தேடிய போது, US National Library Medicine எனும் தளத்தில் கிடைத்த தகவலைக் கீழே பதிவிடுகிறேன்.



      அதன் சுருக்கம் – பொதுவாக இரட்டைக் குழந்தைகளின் பிறப்பின் கால இடைவெளி என்பது 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்குள் இருக்கிறது. சராசரியாக 21 நிமிடங்கள் என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது இயல்பாக பிறக்கும் வழியில் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் அறுவை சிகிச்சைக் கணக்கினைத் தெரிவிக்கவில்லை.

      ஆக, இரட்டைப்பிறவிகள் பிறப்பதில் கால இடைவெளி என்பது, குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் என்பது தெளிவாகிறது.

      சென்ற பதிவில் பதிவிட்டபடியும், இப்போதைய பதிவின்படியும், மிகச்சரியாக ஒரே நேரத்தில் இரு குழந்தைகள் – ஒரே தாய்க்கோ அல்லது வெவ்வேறு தாய்க்கோ பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன.

      இங்கு ஒரு கேள்வி எழலாம், உங்கள் வசதிக்காக புதுச்சேரி போன்ற சிறு நகரத்தினை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மகப்பேறு மருத்துவமனை தகவல்களை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான். சென்னை என்பது ஒரு நகரம் என்றாலும், அரசின் மகப்பேறு மருத்துவமனைகள் அமைந்திருக்கும் இடங்கள் என்பது மிக அருகில் இல்லை. அவ்வாறு அமைந்திருக்கும் மருத்துவ மனைகள், புவியியல் கணக்கீட்டில் (அட்ச-தீர்க்க கோடுகள்) நிச்சயம் மாறுபட்டுத்தான் இருக்கும். ஏனெனில் சென்னை ஒரு பரந்து விரிந்துபட்ட நகரம்.  சிறு அல்லது தனியார் மருத்தவமனைகளை இக்கணக்கில் எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில் அங்கு ஒரு நாளைக்கு பத்திற்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே பிரசவிக்கப்படலாம். இது பற்றிய தகவல்கள் வலைதளத்தில் அதிகம் கிடைக்கப் பெறவில்லை.

      எனவே நாம் ஒரு பெரும்பான்மையான முடிவிற்கு வருவது என்னவென்றால், பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறக்கும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்தான் பிறக்கின்றன. அது குறைந்த பட்சம் 10 நிமிட இடைவெளியில் நடை பெறுகிறது. மிகச் சரியாக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பிறந்ததற்கான பதிவுகள் எதுவும் கிடைக்க வில்லை. அவ்வாறான பதிவுகள் இருந்தால் கொடுத்து உதவுங்கள்.


      சரி, 10 நிமிட இடைவெளி என்றால், சாதகத்தில் வித்தியாசம் இருக்குமா? இருக்காதா? எனும் கேள்வி எழுகிறது. 10 நிமிடம் அல்ல, 5 நிமிட வித்தியாசத்தில் பிறந்திருந்தால் என்ன நிகழ்கிறது என்பதை சாதகக் கட்டங்களுடன் அடுத்தப் பதிவில் விவாதிப்போம்.

No comments: