Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் - கண்ணீர் அஞ்சலி







அக்னிச் சிறகு
      ஓய்ந்து விட்டதா?

அதன் சுவாசம்
      நின்று விட்டதா?

கடமையைச் செய்வதே
      தன் கடமை என்ற
      பாரதத் தாயின்
      தலைமகன்
      தன் மூச்சை நிறுத்திக்   
      கொண்டாரா?

ஏவுகணைத் தந்தை
      ஓய்வெடுத்துக் கொண்டாரா?

கனவு மெய்ப்பட வாழ்ந்தவர்
      கனவாகிப் போனாரா?

வல்லரசு தேசம் காண
      கனவு காணச் செய்தவர்
      காணாமலேயே கண்ணுறங்கி விட்டாரா?

மதம் கடந்த மனித நேயன்
      உயிர் கடந்து போனாரா?

தமிழன் தலைதனைத்
      தரணியில் நிமிர செய்த
      தலைமகன்
      தலை சாய்ந்து போனாரா?

கேள்விகளைக் கேள்செவி கொண்டு
      கேட்டு பதிலுரைத்த
      வேள்வித் தீ அணைந்து போனதா?


எல்லா கேள்விகளுக்கும்
      ‘இல்லை’ எனும் பதிலை
      யாரேனும் சொல்லுங்கள்

கனவென விழித்தெழுந்து
      ஓடிப் போய்
      அவர் கை குலுக்கி வந்திடுவேன்.

எதனையோ கனவுகள்
      மாணவர் நெஞ்சங்களில்

எத்தனையோ கேள்விகள்
      எல்லோர் மனங்களிலும்

விடை கிடைக்க காத்திருக்க

      சொல்லாமல் கொள்ளாமல்

விடை பெற்று சென்றதென்ன
      திருமகனே


யதார்த்த மனிதனே
      துவளும் நெஞ்சங்களுக்கு
      தூண்டா விளக்கே

கனவின் கருப் பொருளை
      மெய்ப்பட உரைத்த மேதையே

ஆழிசூழ் உலகை
      அன்புடன் நேசித்தாய்

வாழும் பூமி
      வளம் காண யோசித்தாய்

அதனால்தான்
      உமது இறுதி மூச்சிலும்
      மாணவர்கள் மத்தியில்
      புவி பற்றி வாசித்தாய்


ஆனால் யோசித்துப் பார்க்காமல்
      கால தேவன் உன்னை
      யாசித்து கொண்டு சென்றான்


அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன்
      அப்துல் கலாமே

நான் யதார்த்தத்தை உணருகின்றேன்
      உங்கள் பாதத்தில் தலைவைத்து
      கண்ணீர் பூக்களைச் சொரிகின்றேன்

வேறென்ன செய்ய முடியும்

      விம்மி அழுவதைத் தவிர.


No comments: