Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, March 9, 2016

புதன் – சோதிட வரையறை – தொடர்ச்சி



சோதிட நூல்கள் பொதுவாக புதனை சிறப்பித்தே கூறுகின்றன. முக்கியமாக ஒருவர் சோதிடத்தில் திறன் பெற்று இருக்க வேண்டுமெனில் அவருக்கு புதன் நன்றாக இருக்க வேண்டும் என்பர். அதாவது, புதன் நன்றாக இருந்தால் அவருக்கு தர்க்க முறையும் கணித வழியும் தன் வசப்படும் என்பதே காரணம்.

புதனின் சோதிட பொது வரையறைகள் என்பன:

சிந்தனைத் திறன்

புத்திக் கூர்மை

கல்வி

பேச்சு

எழுத்தாற்றல்

தாய் மாமன்

அலி தன்மை


இங்கு பொது வரையறையில் – சிந்தனைத் திறன், புத்திக் கூர்மை, கல்வி, பேச்சு, எழுத்தாற்றல் ஆகிய அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. அதாவது சிந்தனைத் திறன் இல்லாமல் புத்திக் கூர்மை கிடையாது – புத்திக் கூர்மை இல்லாமல் கல்வி கிடையாது – கல்வி இல்லாமல் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கிடையாது. கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டுமல்ல, கற்றுணர்தல் அனைத்துமே கல்விதான். எனவே, இவை அனைத்துமே, மூளையின் செயல்திறனால் விளைவது தான். எனவே, மூளை, நரம்புகள், நாக்கு ஆகிய உறுப்புகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய அனைத்திற்கும் புதன் காரகன் எனப்படுகிறது.

அடுத்து, புதனின் முக்கியக் காரகமாக தாய் மாமன் உறவு வருகிறது. அதாவது தொன்றுதொட்டே நமது பண்பாட்டில் தாய்மாமன் உறவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாய் இருந்து வந்துள்ளது. இன்று தனிக் குடும்பம், ஒரு குழந்தைத் திட்டம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டபின் தாய்மாமன் எனும் உறவு விரைவில் இல்லாமலும் போகலாம். ஆனால் அன்றையக் காலத்தில் தாய்மாமன் என்பவர் ஒரு குழந்தைக்கு தந்தையைக் காட்டிலும் மிகமுக்கியமானவர் எனும் கருத்தில் சோதிடத்தில் தனியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது புதன் கோளின் காரகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இதனை தர்க்க முறையில் எவ்வாறு ஒப்புமைப் படுத்துவது என்பது தெரியவில்லை.

புதன் அலித் தன்மைக்கும் காரகன் என சோதிட நூல்கள் கூறுகின்றன. புதன் பிறக் கோள்களில் இருந்து மாறுபட்டிருப்பதை சென்ற பதிவில் குறிப்பிட்டோம். அதாவது பொது விதிகளிலிருந்து மாறுபட்டிருக்கும் மனிதர்கள் ‘அலி’ எனப்படுவது போல், புதனும் அலி எனும் தன்மைக்குக் காரகனாக இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட பொதுவரையறையில் உள்ள அறிவு மற்றும் கல்வித்தன்மைக்கு புதனின் இயல்தன்மையோடு ஒப்பு நோக்க முடியவில்லை. புதனின் இயல்தன்மையில் அது இரும்புப் பாறைகளால் ஆன, சூரியனுக்கு அருகில் உள்ள, வெப்பமும் குளிரும் மிக அதிகமுள்ள ஒரு கோள். அவ்வளவுதான். அதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் எனும் பொதுத் தனிமங்கள் மட்டுமின்றி, ஆக்சிஜன், சோடியம், பொட்டாசியம் ஆகிய தனிமங்கள் அதிகம் உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆக்சிஜனும் சோடியமும் மூளைத்திறனுக்கு மிகமுக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவியல் நூல்கள் கூறுகின்றன. அவ்வளவுதான். இதைக் கொண்டு, புதன் மூளைத் திறனுக்கு காரணமாக இருக்கிறது என நிர்ணயிக்க முடியவில்லை. அறிவியல் அல்லது தர்க்க முறையில் இதை ஒப்பீடு செய்யமுடியும் என யாராவது நினைத்தால் அதனைத் தெரிவியுங்கள். அதற்கேற்றவாறு பதிவில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

ஆனால், சோதிடக் கணக்கீட்டில் புதனைக் கொண்டு ஆராயும்போது புதனின் பொது வரையறைகளும் அவற்றின் நீட்சிகளும் பெரும்பாலும் பொருந்தி வருவதைக் காண முடிகிறது.

புதன் அலித் தன்மை கொண்ட கோள் என வரையறுக்கப்பட்டதால், பிறக் கோள்களைச் சார்ந்தே அதன் வரையறையைச் சோதிடநூல்கள் தீர்மானிக்கின்றன. எடுத்துக் காட்டாக – 

 புதனுடன் இணைந்த -

சூரியன் – பெரும் அறிவு

சந்திரன் – கற்பனை

செவ்வாய் – தர்க்கம்

குரு – நல்ல சிந்தனை

சுக்கிரன் – உணர்ச்சிகரமான சிந்தனை

சனி – ஆழ்ந்த சிந்தனை


புதன் அது சேர்ந்திருக்கும் கோளைப் பொருத்து நல்ல தீய பலன்களைத் தரும் என்று சோதிட அறிஞர்கள் கூறியுள்ளனர். அதனால்தான் புதனை – அரை சுபக் கோள் என்கின்றனர்.

ஆக, இங்கு புதனின் சோதிட வரையறையை முழுமையாக தர்க்கமுறையில் ஒப்பீடு செய்யமுடியவில்லை என்றாலும், சோதிடக் கணக்கீட்டில் பொருந்திவருவதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.


அடுத்து வியாழன்…

Tuesday, March 8, 2016

புதன் – சோதிட வரையறை



சோதிடத்தில் புதனைப் புத்திக்காரகன் என்று சொல்வார்கள். ஒருவன் தர்க்க முறையிலும் கணித வழியிலும் சிந்தனை மிக்கவனாக இருக்க வேண்டுமெனில் புதன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பர். பொதுவாக நல்ல நிலை என்றால் மறைவு நிலை இல்லாமை என்பது பொருள். எடுத்துக் காட்டாக ஒரு கோள் ஆறு, எட்டு, பன்னிரெண்டு, மூன்று ஆகிய இடங்களில் இருந்தால் அது மறைவு நிலையில் உள்ளது என சோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் இதற்கு விதி விலக்காக மறைவில் இருந்தாலும், நல்ல பலனைத் தருகின்ற கோள் புதன் என்பர். அதனால்தான் மறைந்த புதன் நிறைந்த கல்வி எனும் பழமொழியும் சோதிடப் பயன்பாட்டில் இருக்கிறது.


புதனின் சோதிட வரையறைகளைப் பார்க்கும் முன்பு அந்த கோளின் இயல்தன்மைகளைக் காண்போம்.

புதன், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும், சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய குட்டிக் கோள். திட நிலையில் உள்ள கோள்களில் இதுவும் ஒன்று. . மெர்குரி எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பாதரசம் என்பது பொருள் திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம். ஆனால் நமது புதனோ ஒரு இரும்புப் பந்துபோல் திட நிலையில் உள்ளது. இது  தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 59 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அதனால், ஒரு புறம் வெகு வெப்பமாகவும் மறுபுறம் வெகு குளிராகவும் உள்ளது. அதாவது 30 நாட்கள் பகலாகவும் 30 நாட்கள் இரவாகவும் உள்ளது. அதன் சூழலில் உயிர்வாயும், சோடியமும், ஹைட்ரஜனும், ஹீலியமும், பொட்டாசியமும் நிரவி உள்ளன. உயிர்வாயுவான ஆக்சிஜன் இருந்தாலும் அங்கு எதுவும் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறு இல்லை. காரணம் அதிக வெப்பம் அதிக குளிர்.

சில குறிப்புகள்:

·         புதன் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்.
·         மிகச்சிறிய கோள். சந்திரனை விட சற்றே பெரியது.
·         சூரியனிலிருந்து 58 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
·         அதன் ஆரம் 2439 கி.மீ (ஏறக்குறைய சென்னைதில்லி தூரம்)
·         அதன் நிறை 3.30e23 கி.கி.
·         தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 59 நாட்கள்
·         சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள்
·         அதன் சூழல் சூரியக் காற்றாலும், நுண்ணலைக் கதிர்களாலும் எப்போதும் தாக்குதலுக்குள்ளாகி சூழப்பட்டுள்ளது
·         இதற்கு துணைக் கோள்கள் எதுவும் கிடையாது
·         பகல் நேர வெப்பம் 430 செல்சியஸ்; இரவு வெப்பம் (-180) செல்சியஸ்
·         உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை.
·         புதனிலிருந்து சூரியனைப் பார்த்தால், பூமியிலிருந்து பார்ப்பதைப்போல் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
·         புதனிலும் காந்தப் புலம் உண்டு
·         புதன் கற்பாறைகளும் இரும்புப் பாறைகளும் சேர்ந்த ஒரு உலோகப் பந்தாய் சுற்றி வருகிறது. பாறை 30 சதமும், பெரும்பகுதி இரும்புடன் சேர்ந்த உலோகக் கலவையாக 70 சதவீதமாகவும் உள்ளது.
·         மற்ற திடக் கோள்களில் இது நேர்மாறாக இருப்பதால், இதன் தோற்றம் பற்றி மாற்றுக் கருத்துக்களும் உள்ளன.
·         புதன் வேறு ஒரு கேலக்சியில் உருவாகி, பின்னர் வான் மண்டலத்தில் மிதந்து, தற்போது உள்ள இடத்திற்கு வந்திருக்கலாம் எனவும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
·         சூரியனின் கோணத்தில் 28.3 டிகிரியில் புதன் இருப்பதால், சூரியனின் வெளிச்சம் காரணமாக இதனை பெரும்பாலும் பூமியிலிருந்து பார்க்க முடிவதில்லை.

இங்கு புதன் என்பது, அறிவியலாளரின் கருத்துப்படி, நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்து ஒண்டிக்கொண்ட ஒரு கோள். இதை சோதிடத்தில் ‘அலிக் கோள்’ என்கின்றனர். அதாவது மலட்டுத்தன்மை கொண்ட கோள் என்கின்றனர். அதுபோலவே, இயல் தன்மையிலும் இது மற்றக் கோள்களைக் காட்டிலும் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. 70% இரும்புக் குழம்பின் இறுகியத் தன்மையும் 30% பாறைகளும் கொண்டது. இது மற்றக் கோள்களுக்கு நேர் எதிர்மாறானது எனும் கருத்து இயற்பியலாளர்கள் மத்தியில் இருக்கிறது. ஆக, புதன் பிறக் கோள்களிலிருந்து தனித்திருப்பது, அதாவது எதிலும் சாராதிருப்பது அலிக் கோள் என்பதற்கு பொருந்துகிறது.

இனி சோதிட வரையறைகளை ஒப்பிடுவோம்.

அடுத்த பதிவில் புதன் தொடரும்……