Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, August 1, 2016

கோள்களின் பார்வைகள்- வரையறை




சோதிட பலன் உரைப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது, ஒரு குறிப்பிட்ட கோளின், குறிப்பிட்ட பார்வையாகும். பார்வை என்று பொதுவில் கூறினாலும், வானியல் கோட்பாட்டின்படி, ஒரு கோள் தனக்குரிய  குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ள இராசியின் மீது தனது கதிர்வீச்சினை பாய்ச்சும் இலக்காகும்.

கோள்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன. கோள்கள் தாம் பெறும் ஒளியினை அல்லது, தமக்கே உரித்தான கதிர்வீச்சினை அல்லது காந்த விசையினை இந்த வான்வெளி மீது பாய்ச்சுகின்றன. அவ்வாறு பாய்ச்சும்போது அதன் திசைவேகம் என்பது ஒரே அளவில் இருப்பதில்லை. அது சுழலும் தன்மைக்கேற்ப, அதன் சுற்றுப்பாதையின் விலகலுக்கு ஏற்ப, அவை செலுத்தும் கதிர்வீச்சானது மாறுபாடு அடைகின்றன. அதனால் அவற்றிடமிருந்து விடுவிக்கப்படும் ஒளி அல்லது கதிர்வீச்சானது பூமியை வந்தடைதல் அனைத்து நிலைகளிலும் ஒரே அளவில் இருப்பதில்லை. குறிப்பிட்ட கோண அளவில் அது இருக்கும்போது மட்டுமே, அதன் ஒளி அல்லது கதிர்வீச்சானது முழுமையாக வந்தடைய முடிகிறது. அவ்வாறு முழுமையாக வந்தடையும்போதுதான் அக் குறிப்பிட்ட கோளின் கதிர்வீச்சு அல்லது ஒளியின் வீச்சு ஏற்படுத்தக்கூடிய வலிமையும் முழுமை பெறும்.

ஆக, ஒரு கோள் ஒரு குறிப்பிட்ட கோண விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட  இராசியின் மீது அல்லது வீட்டின் மீது முழுமையான ஆதிக்கம் செலுத்துவதே அக்கோளின் பார்வையாகும்.

பொதுவாக, கோண விகிதம் என்பதில் நேர் கோணம் என்பதே முழுமையான வலிமை மிக்கதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்பு நீங்கள் நேர் கோணத்தில் நின்றால் மட்டுமே உங்கள் முகம் தெளிவாக அல்லது முழுமையாக உங்களுக்குத் தெரியும். கோண விகிதம் சற்று மாற்றி நின்றால், உங்கள் முகம் உங்களுக்கு தெரியாமல் போகலாம்.

இங்கு நேர் கோணம் என்பது என்னவென்று பார்ப்போம். ஒரு வட்டத்தின் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு புள்ளி, அந்த வட்டத்தின் மையப்புள்ளி வழியே, அதற்கு நேர் எதிரே உள்ள புள்ளியை ஒரு நேர்கோட்டின் மூலம் தொடுவதாகக் கொள்வோம். அவ்வாறெனில், அந்த வட்டத்தின் மையப்புள்ளியில் அக்கோடு ஏற்படுத்தும் நேர் கோணம் 1800 பாகையாகும்.


ஆக, வான் மண்டல சுற்றுப்பாதையில், ஒரு கோள் தமக்கு நேர் எதிரே உள்ள ஒரு வீட்டிற்கு அல்லது இராசிக்கு 180 பாகையில் இருந்தால், அது தனது முழுமையான கதிர்வீச்சு வலிமையை அந்த வீட்டின் மீது செலுத்தும் என்பது தெளிவாகிறது.

இதனை சுற்றுவட்டப்பாதையில் உள்ள பன்னிரெண்டு இராசிகளுக்கு இடையே செயல்படுத்தினால், ஒரு குறிப்பிட்ட வீட்டில் உள்ள ஒரு கோள் தமக்கு நேர் எதிரே உள்ள வீட்டின் மீது தம் கதிர்வீச்சின் முழு வலிமையைச் செலுத்தும் என்பது உறுதியாகிறது. கோள் இருக்கும் குறிப்பிட்ட வீடு ஒன்று எனக் கொண்டால், அதற்கு 180 பாகையில் நேர் எதிரே இருக்கும் வீடு ஏழாவது வீடாகும்.

இதைத்தான் சோதிடத்தில், அனைத்து கோள்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு என்று கூறுகின்றனர். ஆகவே, அனைத்து கோள்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு என்பது இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது.

மீண்டும் ஒரு எடுத்துக் காட்டிற்கு வருவோம். முகம் பார்க்கும் கண்ணாடி. அக்கண்ணாடிக்கு முன்பு நீங்கள் நேராக நின்றால் உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் என்று கூறினோம். நேராக மட்டுமின்றி, சற்று கோண மாறுபாட்டில் நின்றாலும், உங்கள் முகம் உங்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது. அது கோணத்தின் அளவைப் பொறுத்து தரம் அல்லது வடிவம் தெரியும் நிலையில் இருக்கும்.

அதுபோலவே, ஒரு சில கோள்கள், நேர் எதிர் கோணமான 180 பாகையில் மட்டுமின்றி, வேறு சில கோண மாறுபாட்டிலும், தமது கதிர்வீச்சின் வலிமையை இந்த புவியின் மீது பாய்ச்சும் திறன் கொண்டிருக்கின்றன. அவ்வாறான கோண மாறுபாட்டிற்கு உரிய பாகையானது, எந்த வீட்டிற்கு உரியதாக இருக்கிறதோ, அத்தகைய பார்வையும் அந்த குறிப்பிட்ட கோளிற்கு இருப்பதாக சோதிட நூல்கள் கூறுகின்றன. இங்கு ஒரு சில கோள்கள் என்று கூறியதை வரையறை செய்தால், அவை முறையே, செவ்வாய், வியாழன், சனி ஆகியவையாகும்.

செவ்வாய்க்கு 4, 8 பார்வைகள், அதாவது 90 பாகைகள் மற்றும் 210 பாகைகள்

வியாழனுக்கு 5, 9 பார்வைகள், அதாவது 120 பாகைகள் மற்றும் 240 பாகைகள்

சனிக்கு 3, 10 பார்வைகள், அதாவது 60 பாகைகள் மற்றும் 270 பாகைகள்

இந்த பார்வைகள் அல்லது கோண அளவுகள், அக்கோள்கள் தமக்குரிய பாதை மற்றும் பூமியிலிருந்து விலகல் தூரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது முன்னோர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  

      இங்கு மிக முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். கூடுதல் பார்வைகள் கொண்ட செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களும் சூரிய மண்டலத்தின் வெளிவட்ட சுற்றுப்பாதையில் இருக்கும் கோள்கள். மீண்டும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு வருவோம். நீங்கள் கண்ணாடிக்கு மிக அருகில் இருந்தால், நேர் எதிரில் நின்றால் மட்டுமே உங்கள் முகம் உங்களுக்குத் தெரியும். மிக அருகில் இருந்துகொண்டு சற்று விலகி நின்றால், நிச்சயம் உங்கள் முகம் மறைந்து போகும். நீங்கள் கண்ணாடிக்கு சற்று வெகு தொலைவில் நின்று கொண்டு நேர் எதிரே நின்றால் உங்கள் முகம் தெரியும். சற்று விலகி நின்றாலும், ஒரு குறிப்பிட்ட கோணத்தில் உங்கள் முகம் உங்களுக்குத் தெரியும். இந்த விதிதான் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

      உள் வட்டப்பாதையில் உள்ள கோள்கள் பூமிக்கு நெருக்கமாக அல்லது சூரியனுக்கு அருகில் இருப்பதால், அவை நேர் எதிர் கோணமான 180 பாகையில் மட்டுமே முழுமையடைகின்றன. அதே வேளையில் வெளிவட்டப்பாதையில் உள்ள கோள்கள் பூமியைவிட்டு வெகு தொலைவில் இருப்பதால், அவை 180 பாகை எனும் நேர் எதிர் கோணம் மட்டுமின்றி, வேறு சில கோண அமைப்பிலும் தமது கதிர்வீச்சின் வலிமையை முழுமையாக செலுத்தும் நிலை உள்ளது. [இராகு-கேது புனைக் கோள்கள் என்பதால் அவற்றின் பார்வை பற்றி பின்னர் பார்ப்போம்].

      எனவே, சூரியன் மற்றும் உள்வட்டக் கோள்களான – சூரியன், புதன், வெள்ளி, சந்திரன் ஆகியவை 7-ம் பார்வையும், வெளிவட்டக் கோள்களான – செவ்வாய், 4, 7, 8-ம் பார்வையும், வியாழன், 5, 7, 9-ம் பார்வையும், சனி, 3, 7, 10-ம் பார்வையும் கொண்டிருப்பதாக சோதிட நூல்கள் கூறுவது ஏற்புடைய கருத்தே ஆகும்.


      அடுத்து வரும் பதிவுகளில், கோள்களின் வலிமையில் ஒவ்வொரு கோளையும் தனித் தனியே பார்க்கலாம்


…அடுத்து சூரியனின் வலிமை

No comments: