Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, March 28, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (4)




அயனாம்சம் .. தொடர்ச்சி


அயனாம்சம் பற்றி திரு சிதம்பரம் அய்யர், பிருகத் ஜாதக முன்னுரையில் குறிப்பிடுவதை இங்கே மீள்பதிவு செய்கிறேன். இது பிருகத் ஜாதகா பதிவு 12 & 13 –ல் பதிவிடப்பட்டது


இந்த முன்னுரை 1885- ஆண்டில் எழுதப்பட்டது

            சோதிடம் வானியல் மீது பயணிக்கிறது. விக்ரமாதித்தன் காலத்தில் பிந்தைய (வானியல்) அறிவியலானது நல்ல நிலையில் இருந்தது. கோள்களின் இருப்பிடங்கள் குறித்து அப்போது நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்த கணக்கீடுகளின் அட்டவனையானது, அக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்து வந்துள்ளது. சூரிய மண்டல அமைப்பின் கணக்கீடுகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பல்வேறு சிறு பிழைகளால், ஒருகாலத்தில் பொருந்திவந்த அத்தகைய அட்டவணைகள், பின்னொரு காலத்திற்கு பொருந்தாமல் போயிற்று. இந்த உண்மைய இந்திய வானியலாளர்கள் உணர்ந்திருந்தனர். அதனால், எதிர்கால வானியல் அறிஞர்களுக்கான வழிகாட்டியாக விரிவார்ந்த விதிகளை வகுத்திருந்தனர்.

            கணிதம் செய்வதில் ஏற்படும் பிழையானது, ஒரு வேதியனைக் கொல்வதற்கு ஒப்பாகும் என்பதால், வான் வெளியினைத் தினமும் உற்று நோக்கி கோள்களின் சரியான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும்.

            இதனைச் சரியான உற்றுநோக்கு இல்லாமல் செய்ய முடியாது. இந்த பூமியில் அவ்வாறான அறிஞர்களும் இருந்தனர்; ஆனால் அயல்நாட்டினரின் படையெடுப்பு, நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்களிட மிருந்து சரியான ஊக்குவிப்பு இல்லாமை ஆகியவற்றால், இந்த அறிவியலானது முன்னேறிச் செல்ல முடியாமல் போனது, அதனால் முன்பு சொன்ன கணக்கீடுகளின் அட்டவணை, திருத்தம் செய்யப்படாமல் போனதால், பயனற்றும் போயிற்று. அதனால், உள்ளூர் சோதிடர்களால் தயாரிக்கப்பட்ட நாட்காட்டிகளால், கோள்களின் உண்மையான இருப்பிட நிலையைக் கொடுக்கமுடியவில்லை. இத்தவறானது கடந்த 1000 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

            ஐரோப்பா மற்றும் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட கடல்சார் பஞ்சாங்கம் வரைபடமானது, கோள்களின் சரியான இருப்பிட நிலையைத் தெரிவிக்கின்றன; மற்றும் திருவாளர்கள்: பனாரசின் பாபு தேவ சாஸ்த்ரி, பூனாவின் லட்சுமண சத்ராய், மதராசின் இரகுநாதச் சாரியார், கும்பகோணம் வெங்கடேஸ்வர தீட்சிதர், சுந்தரேஸ்வர சுருதி ஆகியோர் சரியான புதிய அட்டவணையின் அடிப்படையில் பஞ்சாங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய அட்டவணைகள், நாம் கோள்களின் சரியான இருப்பிடத்தை வான்-புவி வெட்டுப்புள்ளியிலிருந்து (vernal Equinox), அதாவது சூரிய சுற்றுப்பாதையும் புவிப்பாதையும் வெட்டிக்கொள்ளும் இரண்டு மையப்புள்ளிகளிலிருந்து, நாம் அறிய உதவுகின்றன. இப்புள்ளியானது மேசத்தின் மேற்குப்பகுதியின் முதல் புள்ளியாகும்.

            இதன் சுற்றானது வருடத்திற்கு 50” எனும் அளவில் பின்தங்குகிறது. ஆனால், இந்தியக் கணிதத்தின்படி மேசத்தின் முதல் புள்ளியானது சூரியப்பாதையில் உள்ள ரேவதி விண்மீன் (யோகதாரா தொகுப்பில்) மீது அமைந்துள்ளது. இந்த விண்மீனானது வான்-புவி வெட்டுப்புள்ளிக்கு (vernal Equinox) கிழக்கே 20o உள்ளது. இந்த விண்மீனிலிருந்து கோள்களின் இருப்பிடத்தைக் கணிப்பது  நிர்ணய ஸ்புடம் என்றும், vernal Equinox-லிருந்து இருப்பிடத்தைக் கணிப்பது சாயன ஸ்புடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையே ஏற்படும் சிறு இடைவெளி வித்தியாசமானது அயனாம்சம் என அழைக்கப்படுகிறது. இந்திய சோதிடமானது  கோள்களின் நிர்ணய ஸ்புடம் எனும் கணக்கினையும், நவீன அட்டவணையானது நமக்கு சரியான சாயன ஸ்புடத்தையும் தருகிறது; எனவே, அயனாம்சத்தின் அளவு துள்ளியமாகத் தெரிய வருமானால், அதனை சாயன ஸ்புடத்திலிருந்து கழிக்கலாம்அதன் மீதமானது நிர்ணய ஸ்புடத்திற்கு தேவையாகும். ஆனால் மிகச்சரியான அயனாம்சம் தெரியவில்லை, அதனை நேரடியாகக் உற்றுநோக்கி அறிய முடிவதில்லை, ஏனெனில் ரேவதி விண்மீனானது மறைந்து விட்டது. இந்த பொருள் பற்றி ஏப்பிரல் (1883) தியோசொபிஸ்ட் இதழில் எழுதியிருக்கிறேன். பல்வேறு பஞ்சாங்க வெளியீட்டாளர்கள், தங்களுக்கு ஒத்துவரும் வகையில், தன்னிச்சையாக பல்வேறு அயனாம்ச இடைவெளி அளவினைக் குறிப்பிடுகிறார்கள்.



ஆக, அயனாம்சம் என்பது நிராயனத்திற்கும் சாயனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது தெளிவாகிறது. தற்போதைய நடைமுறையில் அயனாம்ச மதிப்பானது பலவேறாக உள்ளது. இதில் குறிப்பாக, திரு லஹிரிமுறை, திரு கிருஷ்ணமூர்த்தி. முறை, திரு இராமன் முறை ஆகிய மூவரின் முறை பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.


இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இந்த மூவரின் முறையினையும் பயன்படுத்தி, திருக்கணிதமுறை பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன. இதுமட்டுமின்றி, நாசாவின் வானியல் கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசின் ஆதரவோடு கொல்கத்தாவில் உள்ள Rashtriya Panchang and Positional Astronomy Centre, பஞ்சாங்கம் தயாரித்து அளிக்கிறது.  எவ்வாறு இருப்பினும் திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையேயே கணக்கீட்டில் மீச்சிறு வித்தியாசங்கள் இருக்கின்றன.


ஆனால் இத்தகைய எவ்வித கணக்கீட்டு முறைகளுக்கும் உட்படாமல், நட்சத்திர மண்டலம் அசைவற்றது எனும் கோட்பாட்டுடன் தயாரிக்கப்படுவதுதான் வாக்கிய பஞ்சாங்கம்.


மேலும் தொடர்வோம்….


Sunday, March 26, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (3)





அயனாம்சம்

 

சோதிடக் கணிதம் வானியலை அடிப்படையாகக் கொண்டது என்பதாலும், வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள வேறுபாடே, வானியல் சார்ந்தது என்பதாலும், மீண்டும் கொஞ்சம் வான் கணிதம் பார்ப்போம். குறிப்பாக அயனாம்சம் பற்றி பார்ப்போம்.

அயனாம்சம் என்பது வானியல்-சோதிடத்திற்கு மிகவும் முக்கியமானது. அயனாம்ச கருத்துக்கள் ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வானியல்-சோதிடவியல் அறிஞர்களால் பேசப்பட்டுவிட்டன.

வான் மண்டலமானது, பல்வேறு விண்மீன் தொகுதிகளையும், விண்மீன்களைச் சுற்றும் கோள்களின் தொகுப்புகளையும் கொண்டிருந்தாலும், அவை ஒரே இடத்தில் இருப்பதில்லை. நகர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக, பால்வீதியில் இருக்கும் நமது சூரியக் குடும்பம், அதாவது சூரியன் தன்னை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கோள்களுடன், பால்வீதியினையும் சுற்றிவருகிறது. சூரியக் குடும்பம்போல் எண்ணற்ற குடும்பங்களைக் கொண்டிருக்கும் பால்வீதியும், அனைத்து குடும்பங்களுடனும் வான் வெளியில் சுற்றி வருகிறது. எனவே, வான் வெளியானது தானும் சுழன்று கொண்டு, தன்னுள் இருப்பனவற்றையும் சுழலச் செய்து கொண்டு இருக்கிறது.

இந்தக் கணக்கின்படி, சூரியன் நட்சத்திர மண்டலத்தினை சுற்றி வரும் வேளையில், நட்சத்திர மண்டலமும் தனக்குரிய வேகத்தில் சுற்றிக் கொண்டுதான் இருக்கும். அதாவது, சுற்றலின் வேகம் என்பது ஏறக்குறைய 26,000 ஆண்டுகள் என்பதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதன்படி, “A” எனும் இடம் சூரியனின் சுற்றுப்பாதையான தொடக்கப் புள்ளி ‘0’ என இருந்தால், சூரியன் முழுமையாக ஓராண்டு சுற்றி வரும்போது, அப்புள்ளி சற்று நகர்ந்திருக்கக் கூடும். தொடக்கத்தில் இருந்த இடம் “B”  எனும் இடமாக மாறி இருக்கக் கூடும். அதாவது தொடக்க புள்ளியானது பின்னோக்கி நகர்ந்ததுபோல் ஆகிவிடுகிறது. ஆக, A எனும் புள்ளிக்கும்(அதாவது தொடக்க புள்ளியின் தற்போதைய நிலைக்கும்) B எனும் புள்ளிக்கும்(தொடக்க புள்ளியின் ஆரம்ப நிலைக்கும்) இடையிலான இந்த வித்தியாசம், அயனாம்சம் எனப்படுகிறது. அயனம் என்றால் நகர்வு எனும் பொருள் கொள்ளப்பட்டதால், இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது எளிதாகப் புரிவதற்காக கொடுக்கப்பட்ட விளக்கம்.

இந்த அயனாம்சக் கணக்கீடானது, வராகமிகிரர், காளிதாசர் காலத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

அயனாம்சம் பற்றி, சோதிட ரத்னா திரு S.  சந்திரசேகர் அவர்கள் தமிழோவியம் வலைப்பூவில் எழுதிய பதிவினை இங்கு பதிவிடுகிறேன். (நன்றி: தமிழோவியம் வலைப்பூ).

நாம் ஏற்கனவே நமது பாடங்களில் அயனாம்சத்தைப் பற்றி எழுதி இருக்கிறோம்.  இப்போது சிறிது விரிவாகப் பார்ப்போம். மேஷத்தின் ஆரம்ப இடத்தை ஆங்கிலத்தில் "Vernal Equinox" என்றழைப்பார்கள். இந்த இடத்தைக் காட்ட முடியுமா?  காட்ட முடியும்.  மார்ச் 21 ம்தேதி ஒவ்வொரு ஆண்டும் சூரியன் இந்த இடத்தில்தான் பிரவேசம் செய்கிறார்.  அன்று பகல் பொழுதும் இரவுப் பொழுதும் சரிசமமாக இருக்கும்.  பஞ்சாங்கத்திப் பாருங்கள். "அகஸ்" என்ற கட்டத்தின் கீழே 30 நாழிகை என்று போட்டு இருப்பார்கள்.  அகஸ் என்றால் பகல் பொழுதின் அளவு எனப் பெயர். பகல் பொழுதின் அளவு 30 நாழிகை என்றால் இரவுப் பொழுதின் அளவு என்ன?  அதுவும் 30 நாழிகைதான்.  ஒரு நாளின் அளவு 60  நாழிகை அல்லவா?

நமது பூமிக்கு மேல்  ஆகாயம் ஒரு கோளம்போல் தோற்றமளிக்கிறது அல்லவா?  அதாவது ஆகாயக் கோளத்திற்கு நடுவில் பூமி இருக்கிறது. . இதே போன்ற அமைப்பை ஆங்கிலத்தில் Concentric Circle என்றழைப்பார்கள்.

இந்தஆகாயக் கோளத்திற்குள்தான் எல்லா கிரகங்களும் இருக்கின்றன. இவ்விதமான தோற்றத்தை "geo-centric"  என்றழைக்கிறோம். பூமியின் பூமத்திய ரேகைக்கு மேல் இந்த ஆகாயக் கோளத்தின் பூமத்திய ரேகை செல்கிறது.  இந்த ஆகாயக் கோளத்தின் பூமத்தியரேகையும், பூமியைச் சூரியன் சுற்றும் பாதையும் சந்திக்கும் இடம்தான் "Vernal Equinox"  என்ற மேஷத்தின் ஆரம்ப இடம்.

இந்த இடம் பின் நோக்கிச் செல்தாக  வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். பூமி தன்னைத்தானே சுற்றுகிறதல்லவா? இந்த அசைவினால் மேஷத்தின் ஆரம்ப இடம் பின்னோக்கிச் செல்வதாக வானவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த வக்கிரகதியை  அடிப்படையாகக் கொண்டதுதான் மேல் நாட்டவர்கள் ஜோதிடம்.  அதாவது மேஷத்தின் ஆரம்ப இடமான Vernal Equinox  என்னும் இடம் ஒவ்வொரு ஆண்டும் பினோக்கிச் செல்வதைக் கணக்கில் கொண்டு அதன்படி ஜாதகங்கள் கணித்துப் பலன்களைக் கூறுவதே மேலை நாட்டவர் ஜோதிடம்.  இந்தக் கணிதத்திற்கு "Nirayana" என்று பெயர்.  

ஆனால் நமது ஜோதிடம் இந்த வக்கிரகதியைக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. மேஷத்தின் ஆரம்பத்திலுள்ள அஸ்வனி நட்சத்திரத்தின் ஆரம்ப இடம்தான் நமது ஜோதிடத்தில் ஆரம்ப இடம். நமது ஜோதிடம் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.  இந்த அஸ்வினி நட்சத்திரம் பின்நோக்கிச் செல்வது இல்லை. ஆக நமது Zodiac நிலையானது. அசைவில்லாதது. இதற்கு "Nirayana"  எனப் பெயர். இந்த இரண்டு கணிதத்திற்கும்  உள்ள கணித வித்தியாசமே "Ayanamsa"  என்பது.   Sayana - கணிதத்திலிருந்து  Ayanamsa - வைக் கழித்தால் கிடைப்பது நமது  Nirayana -  கணிதம். 

இது எப்பொழுதிலிருந்து பின் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது?  என்ன வேகத்தில் பின் நோக்கிச் செல்கிறது? என்பதில் நிறையக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.  வானவியல் அறிஞர்கள்/ஜோதிட வல்லுனர்கள் பலர் பலவிதக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றர்.  லஹ்ரி அவர்கள் 285 A.D. யிலிருந்து பின்னோக்கிச் செல்வதாகக் கூறுகின்றார்.  சபேரியல் 498 A.D.யிலிருந்து பின்னோக்குவதாகக் கூறுகின்றார்.  கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  291 A.D. யிலிருந்து பின்னோக்கிச் செல்வதாகக் கூறுகிறார்.   இவ்வாறாக இதில் பலவிதமான கருத்துக்கள் காணப்படுகின்றன.  அதேபோல் என்ன வேகத்தில் பின்னோக்கிச் செல்கிறது என்பதிலும் பலவிதமான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆரியபட்டா, ஒரு வருடத்திற்கு 46.3 செகண்டுகள் வேகத்தில் பின்னேக்கிச் செல்வதாகக் கூறுகின்றார். பராசரர் 46.5 செகண்டுகள் வேகத்திலும், New Comb  50.23 செகண்டுகள் வேகத்திலும் வராகிமிகிரர் 50.00 செகண்டுகள் வேகத்திலும் பின்னோக்குவதாகக் கூறுகின்றார்கள்.  இவ்வாறாக ஒவ்வொருவரும்  ஒவ்வொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர்.  ஆகவேதான் பலவிதமான  அயனாம்சங்கள் புழக்கத்திலுள்ளன. பலவிதமான அயனாம்சங்கள் இருப்பதனால்தான் ஒரே நேரத்தில் பிறந்த ஒருவருக்கு பலவிதமான ஜாதகங்கள் கணிக்கப்படுகின்றன.  ஜாதகத்திற்கு ஜாதகம் வித்தியாசப் படுகிறது.

இது கொஞ்சம் எளிதான விளக்கமாக இருப்பதால், புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். சோதிடரத்னா திரு S.  சந்திரசேகர் (தமிழோவியம்) அவர்களுக்கு நன்றி.


அயனாம்சம் பற்றி திரு சிதம்பரம் அய்யர் அவர்களின் (பிருகத் ஜாதகா ஆங்கில உரையாசிரியர்) கருத்துரையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

….அயனாம்சம் மேலும் தொடரும்.

27.03.2017
[குறிப்பு: மேலே உள்ள திரு S.  சந்திரசேகரன் அவர்களின் பதிவில், நான்காவது பத்தியில் கடைசி வரியில் Nirayana  என்பதை Sayana என மாற்றி படிக்கவும். இது அவரது பதிவினை அப்படியே எடுத்து போட்டதால், அதில் எந்த திருத்தமும் செய்யவில்லை என்பதோடு அதனை நான் சரியாகக் கவனிக்கவில்ல என்பதுதான் உண்மை. அது அச்சு பிழையாக இருக்கலாம் என நினைக்கிறேன். “நிராயண” - நிலையானது, ‘சாயண’ - நகர்வது என்பது பொருள்.  தவறினை மின்னஞ்சலில் சுட்டிக் காட்டிய திரு ஓம்பிரகாஷ் ஆதிநாராயணன் அவர்களுக்கு நன்றி.]