Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, April 14, 2018




அனைவருக்கும் 

எம் தமிழ் புத்தாண்டு 

நல் வாழ்த்துக்கள்


-அன்புடன் 
நிமித்திகன்

Sunday, February 18, 2018

ஐம்பெருங்கோள்களின் யோகங்கள் (அ) பஞ்சமகா புருஷ யோகங்கள்




சோதிட விதிகளின்படி கோள்கள் ஒன்பது என்றாலும், சூரியனும் சந்திரனும் தனித்துவம் வாய்ந்தவை. இராகுவும் கேதுவும் கோள்களின் கணக்கில் உள்ள வெற்றிட முனைகள். மீதம் இருப்பவை, ஐம்பெரும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவை. வானியல் கருத்துப்படியும் இவைதான் கோள்கள். எனவே இவை ஐந்தும் ஐம்பெருங்கோள்கள் அல்லது பஞ்சமகா கோள்கள் என அழைக்கப்படுகின்றன.


இந்த ஐந்து கோள்களும் தம்முடைய ஆட்சி அல்லது உச்ச வீடுகளில் ஏற்படுத்தும் யோகம் பஞ்சமகா யோகம் எனப்படுகிறது.


அதாவது, ஒரு சாதகத்தில் இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கோளானது கேந்திர (நாற்கர) வீடுகளில் இருக்கும் நிலையில், அந்த நாற்கர அல்லது கேந்திர வீடானது, அக்கோளிற்கு ஆட்சி வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் அந்த யோகமானது பஞ்சமகா புருச யோகம் அல்லது ஐம்பெருங்கோள்களின் யோகம் எனும் நிலையில் கணக்கில் கொள்ளப்படுகிறது.


இந்த யோகமானது ஐந்து கோள்களுக்கு ஏற்ப அவைகளுக்கு உரிய சிறப்பின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவை முறையே-

1.   ருசக மகா புருச யோகம் (செவ்வாய்)
2.   பத்ர மகா புருச யோகம் (புதன்)
3.   அம்ச மகா புருச யோகம் (வியாழன்)
4.   மாளவ்ய மகா புருச யோகம் (வெள்ளி)
5.   சக மகா புருச யோகம் (சனி)


இனி, ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்-

1. ருசக மகா புருச யோகம் – செவ்வாயின் தொடர்பு

செவ்வாயானது, இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து நாற்கர வீடுகளான (கேந்திர வீடுகளில்) இருக்கும் நிலையில் அந்த வீடானது செவ்வாயின் ஆட்சி அல்லது உச்ச வீடுகளாக இருந்தால், அது ருசக மகா புருச யோகம் எனப்படும். இங்கு குறிப்பிட்டு சொல்வதென்றால், செவ்வாயானது மேசம் அல்லது விருச்சிகம் அல்லது மகரத்தில் இருக்க வேண்டும். அந்த வீடானது இலக்கினம் அல்லது சந்திரனுக்குக் கேந்திரமாகவும் இருக்க வேண்டும்.



மேலே உள்ள அமைப்புகள் அனைத்தும் ருசக மகா யோக அமைப்பு உடையவை. ஆனால், 4-வது எடுத்துக்காட்டில், செவ்வாயானது சந்திரனுக்கு 10-ல் இருந்தாலும், இலக்கினத்திற்கு 8-ல் உள்ளதையும் கவனிக்க வேண்டும். இங்கு ருசக மகா யோக அமைப்பு இருந்தும், அதற்கு நற்பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். ஆக முன்பே கூறியபடி, யோக அமைப்பினைக் கவனிக்கும்போது பிற நிலைகளையும் கவனிக்க வேண்டும்.


ருசக மகா யோகத்தின் பலன்கள்:

1.   நல்ல உடல் நிலை
2.   இளமையானத் தோற்றம்
3.   பழமையை மதித்தல்
4.   கல்வித்திறன்
5.   அரசர் (அ) அரசருக்கு நிகரான மதிப்பு
6.   செல்வந்தர்
7.   தர்ம சிந்தனை
8.   நீண்ட ஆயுள்

ஏனைய நான்கு யோகங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.


பஞ்ச மகா யோகங்கள் தொடரும்.


Tuesday, February 13, 2018

கஜகேசரி யோகம்



நலன் தரும் யோகங்களில் கஜ கேசரி யோகம் சிறப்பான யோகமாகும். கஜ என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். அதாவது யானையும் சிங்கமும் சேர்ந்திருந்தால் எவ்வளவு பலமோ அவ்வளவு பலமிக்கதாக இந்த யோகம் கூறப்படுகிறது.


இதுபற்றி எனது முதுகலை ஆசிரியர் பாடம் நடத்தும்போது இந்த யோகத்தின் சிறப்புகளைக் கூறிவிட்டு, கஜ என்றால யானை, கேசரி என்றால் சிங்கம். அதாவது யானைக்கு குருவும் சிம்மத்திற்கு சூரியனும் என நினைத்துக் கொண்டு குருவும் சூரியனும் பார்த்துக் கொண்டால் கஜ கேசரி யோகம் என்று எழுதிவிடாதீர்கள் என எச்சரித்தார்.


கஜகேசரி யோக அமைப்பு என்பது மிகவும் எளிமையானது. ஒரு இராசியில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு கேந்திரத்தில் (நாற்கரத்தில்) வியாழன் இருப்பது கஜகேசரி யோகம் எனப்படும்.  ஒரு சாதகத்தில் இலக்கினம் எவ்வளவு சிறப்புடன் பார்க்கப்படுகிறதோ அதே அளவுகோலில் சந்திரன் இருக்கும் இடமும் அதாவது சந்திர இலக்கினமும் பார்க்கப்படுகிறது.


ஒரு சாதகத்தில் நாற்கர முனைகளும் (கேந்திரமும்) முக்கியம் என்பதை ஏற்கனவே நாம் பதிவு செய்துள்ளோம். சோதிடத்தில் பொதுவில் நிலவும் பேச்சு என்னவெனில் கேந்திரத்தில் சுபக் கோள்கள் நின்றால் கேந்திராதிபத்திய தோசம் ஏற்படும் என்பது. எனவே இலக்கினத்தினை அடிப்படையாகக் கொண்ட கேந்திரங்களில் (4, 7, 10 வீடுகள்) வியாழன் எனும் சுபக் கோள் நின்றால் கேந்திராதிபத்திய தோசம் ஏற்படும் எனக் கூறுவர். இதற்கு மாற்றுக் கருத்தும் உண்டு.


ஆனால் கஜ கேசரி யோகத்தில், சந்திர இலக்கினத்திற்கு கேந்திரத்தில் வியாழன் இருப்பதால் மேற்கூறிய விதி பொருந்தாமல் போய்விடுவதுடன், வியாழனின் பலன் அதிகரித்துக் காணப்படும் நிலை ஏற்படுகிறது.  எனவே கஜகேசரி யோகம் என்பது சந்திர இலக்கினத்திற்கு கேந்திரத்தில் வியாழன் இருக்கும் நிலையில் வலிமை வாய்ந்த யோகமாகக் கணக்கிடப்படுகிறது.


கஜகேசரி யோகம் அமைந்த சாதகருக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் என்பது:-
1.   புத்திக் கூர்மை
2.   பலசாலி
3.   செல்வந்தர்
4.   மதிப்பு மிக்கவர்
5.   ஊர் தலைவர்
6.   அரசின் ஆதரவு
7.   நீண்ட ஆயுள்


கஜகேசரி யோகமானது சந்திரனுக்கு கேந்திரத்தில் (நாற்கரத்தில்) வியாழன் இருந்தால் ஏற்படக்கூடியது என்றாலும், வேறு சில அமைப்புகளில் சந்திரனுக்கும் வியாழனுக்கும் தொடர்பு இருந்தாலும் ஏற்படும் என சில சோதிட நூல்கள் கூறுகின்றன.

1.   சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பது
2.   வியாழனைச் சந்திரன் பார்ப்பது
3.   சந்திரனை வியாழன் பார்ப்பது
4.   சந்திரனும் வியாழனும் பரிவர்த்தனை ஆவது


இங்கு முதல் கருத்தானது அடிப்படையான விதி என்பதால் மாற்றுக் கருத்து இல்லை.
இரண்டாவது கருத்தின்படி, சந்திரன் வியாழனைத் தமது ஏழாம் பார்வையால் மட்டுமே பார்க்க முடியும் என்பதாலும், அதாவது அந்த நிலையில் வியாழனானது சந்திரனுக்கு 7-ம் இடத்தில் (கேந்திரத்தில்) இருக்கும் என்பதாலும் இந்தக் கருத்தும் பொருந்துகிறது.


மூன்றாவது கருத்தின்படி, வியாழனுக்கு 5, 7, 9-ம் பார்வைகள் உண்டு என்பதால், 7-ஐத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வியாழனானது 5-ம் பார்வைக்கு சந்திரனிலிருந்து 9-ம் இடத்திலும், 9-ம் பார்வைக்கு சந்திரனிலிருந்து 5-ம் இடத்திலும் இருக்க வேண்டும். அவை திரிகோண இடங்கள் என்பதால், கஜ கேசரி யோகம் அமைய வாய்ப்பில்லை.


நான்காவது கருத்தின்படி, பரிவர்த்தனை ஏற்பட வேண்டுமென்றால், சந்திரன் தனுசு அல்லது மீனத்திலும், வியாழன் கடகத்தில் உச்சமாகவும் இருக்க வேண்டும். அந்த நிலையில் பரிவர்த்தனையானது சந்திர இலக்கினத்திற்கு  6-8, அல்லது 5-9 எனும் நிலையில் இருக்க நேரிடும். இதுவும் கேந்திர விதிக்கு பொருந்தவில்லை என்பதால் இதனையும் தவிர்த்து விடலாம்.


எனவே, கஜகேசரி யோகம் என்பது சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பது என்பதே சரியானதாக இருக்கிறது.


திரு பி.வி.இராமன் அவர்கள், தனது “300 important combinations” எனும் புத்தகத்தில் சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பதை மட்டுமே கஜகேசரி யோகம் எனக் கூறுகிறார். [எனது நண்பர் திரு ஓம் பிரகாஷ் அவர்களின் கருத்தும் தேவைப்படுகிறது].  


அதேவேளையில், முன்பு கூறிய பொதுவிதிப்படி,  நல்ல யோகங்கள் அமைய கோள்கள்  நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
கஜகேசரி யோக அமைப்புகள் சிலவற்றைக் காண்போம்.






 இங்கு முதல் சாதகத்தில், இலக்கினத்திலேயே சந்திரன் இருப்பதாலும், இலக்கினக் கேந்திரத்தில் வியாழன் இருப்பது சிறப்பு. அதுபோல, 4-ல் வியாழன் இருந்தால், கேந்திரம் மற்றும் உச்ச நிலையில் இருப்பதால் சிறப்பு. மூன்றாவது கேந்திரமான 7-ல் இருந்தால், அது வியாழனுக்கு பகை வீடு என்பதால் சிறப்பு குறைவாக இருக்கும். நான்காவது கேந்திரமான 10-ல் வியாழன் இருந்தால், அங்கு அது நீச்ச நிலையில் இருக்கும் என்பதால் சிறப்பில்லை


இரண்டாவது சாதகத்தில், இரண்டில் சந்திரன் உச்ச நிலையில். இந்தநிலையில் சந்திரனுடன் வியாழன் இருந்தால் மிகவும் சிறப்பு. இரண்டாவது நிலையில், சந்திரனுக்கு 4-ல், அதே வேளையில் இலக்கினத்திற்கு 5-ல் வியாழன் இருப்பதால் சிறப்பு. மூன்றாவது நிலையில், சந்திரனுக்கு 7-ல் வியாழன் இருந்தால் அது இலக்கினத்திற்கு 8-ம் இடம் என்பதால் சிறப்பில்லை. நான்காவது நிலையில் சந்திரனுக்கு 10, இலக்கினத்திற்கு 11 எனும் இடத்தில் வியாழன் இருப்பது சிறப்பு.


மேலே கூறிய விளக்கங்கள் பிற கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


… யோகங்கள் தொடரும்




Wednesday, January 31, 2018

தர்மகர்மாதிபதி யோகம்(2)


தொடர்ச்சி....

தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் அதற்குரிய பலன்கள் கிடைக்காமல் போவதற்கு, சாதகக் கட்டத்தில் கோள்கள் எங்கு அமைந்திருக்கின்றன எனும் நிலையே காரணமாக இருக்கிறது.


அதாவது, 9-க்கும் 10-க்கும் உரிய கோள்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது, மறைவு, நீச்சம், பகை, வக்கிரம், பலமற்று இருத்தல், என்பன போன்று இருப்பது முழுமையான அல்லது பலனே இல்லாது போவதற்கு காரணமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.


அதுமட்டுமின்றி, எந்த ஒரு யோக அமைப்பின் பலனும் அதற்குரிய கால திசையில் மட்டுமே பலனைக் கொடுக்கும் என்றும் சோதிட நூல்கள் கூறுகின்றன. ஆக தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் என்பது அவ்விரண்டு கோள்களும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து மட்டும் அல்லாமல் அவைகளுக்குரிய காலதிசையினையும் பொருத்தே கிடைக்கக் கூடும்,


எடுத்துக்காட்டாக-



இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சாதகங்களின் அமைப்பினைப் பார்ப்போம்

(1)  இலக்கினம் – மேசம்; 9-ம் இடம் தனுசு (அதிபதி – குரு); 10-ம் இடம் மகரம் (அதிபதி – சனி).  இங்கு குருவும் உச்சம்; சனியும் உச்சம். அதே வேளையில்  சனிக்கோளின் 10-பார்வையானது குருவின் மீது. எனவே, இது தர்மகர்மாதிபதி யோகத்திற்கு உரிய அமைப்பு எனலாம். மேலும் இங்கு சிறப்பான நிலை என்னவென்றால், குரு முதல் நாற்கரத்தில்(கேந்திரத்தில்), சனியானது இரண்டாவது நாற்கரத்தில்(கேந்திரத்தில்) இருப்பதும் சிறப்பான நிலை என்பதால், அந்த நிலைக்குரிய பலனும் கிடைக்கக் கூடும். [சனி 7-ல் இருக்கலாமா? குருவிற்கு கேந்திராதிபத்திய தோசம் உள்ளதா? என்பதெல்லாம் பிறகு பார்க்கலாம்].

(2)  இலக்கினம் – கடகம்; 9-ம் இடம் மீனம் (அதிபதி-குரு); 10-ம் இடம் மேசம் (அதிபதி-செவ்வாய்); இலக்கினத்தில் குரு உச்சம்; 7-ல் செவ்வாய் உச்சம்; 7-ம் பார்வையாக இரு கோள்களும் ஒன்றை ஒன்று பார்க்கின்றன. எனவே, தர்மகர்மாதிபதி யோக அமைப்பு உண்டு. மேலும், இரு கோள்களும் உச்ச நிலையில் இருப்பதால் மிக சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். [7-ல் செவ்வாய் – செவ்வாய் தோசமா என்பதை தனியாக செவ்வாய் தோசம் பற்றிய பதிவில் அலசுவோம்]

(3)  இலக்கினம் – கடகம்; 9-ம் இடம் மீனம் (அதிபதி – குரு); 10-ம் இடம் மேசம் (அதிபதி – செவ்வாய்). இரண்டும் ஒன்றை ஒன்று 7-ம் பார்வையால் பார்த்துக் கொள்கின்றன. எனவே தர்மகர்மாதிபதி யோக அமைப்பு உண்டு. ஆனால், இங்கு 9-ம் அதிபதியும் நீச்சம், 10-ம் அதிபதியும் நீச்சம்.  எனவே தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் பலன் என்பது கேள்விக்குறியே.

(4)  இதுவும் மேலே கூறிய அமைப்பே. தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் இரண்டும் நீச்ச நிலையில் இருப்பதால் சிறப்பில்லை என கூறினாலும், இங்கு வேறொரு நிலையினை நாம் பார்க்க வேண்டும். இலக்கினாதிபதி சந்திரன் உச்ச நிலையில் இருப்பதால், சந்திரனின் வீட்டில் இருக்கும் செவ்வாய் நீச்ச பங்கம் அடையும் நிலையில் உள்ளது. அதுபோலவே சனியின் வீட்டில் இருக்கும் குருவும், சனியின் உச்ச நிலையால் நீச்ச பங்கம் அடையும் நிலையில் உள்ளது.  ஆக, 9, 10-க்கு உரிய கோள்கள் நீச்சம் அடைந்திருந்தாலும், அவை நீச்ச பங்கம் அடைந்திருப்பதால், தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் அவைகளின் தசாக்காலத்தில் கிடைக்கும் எனலாம்.


மேலே கூறியவை எடுத்துக்காட்டுகளே. இதுபோன்று எண்ணற்ற இணைவுகளில் தர்மகர்மாதியோக அமைப்பு உள்ள சாதகங்கள் அமையக் கூடும். ஆக, தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் என்பது அக்கோள்கள் இருக்கும் நிலையினில் மட்டுமல்லாமல், சாதகத்தில் உள்ள பிறக்கோள்களின் அமைப்பிற்கேற்பவும், தசாபுத்திக் காலத்தின் நிலைக்கேற்பவும் பலன் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


எனவே தர்மகர்மாதிபதி யோக அமைப்பு என்பது 9, 10-ம் இடத்தின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பால் ஏற்படக்கூடிய அமைப்பாகும். அதற்குரிய பலன்கள் என்பது அவை இருக்கும் நிலைகளுக்கு ஏற்ப, சிறப்பாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கக் கூடும் அல்லது பலனே இல்லாமலும் போகக் கூடும்.


[குறிப்பு: மேற்கூறிய விளக்கம் அனைத்து யோகங்களுக்கும் பொருந்தும்]



யோகங்கள் தொடரும்……

Tuesday, January 30, 2018

தர்மகர்மாதிபதி யோகம் (1)



சாதகத்தில் கோள்களின் அமைவில் ஏற்படக்கூடிய யோகங்களில் முதன்மையானது தர்மகர்மாதிபதி யோகம். இராசி சக்கரத்தின் வீடுகளில் ஒன்பதாம் இடமும் பத்தாம் இடமும் மிக முக்கியமான இடங்கள். ஒன்பதாம் இடம் என்பது செல்வச் சிறப்பு வீடு அல்லது பாக்கிய ஸ்தானம் எனப்படும். செல்வம் என்றால் பணம், சொத்து, என்பது மட்டுமல்ல புகழும் பெருமையும் நோய்நொடியற்ற வாழ்க்கையும் என அனைத்தும் கொண்டதுதான் பாக்கியம் எனப்படும். பொதுவாக, ஒன்பதாம் வீட்டின் அதிபதி எந்த நிலையில் இருந்தாலும் முடிந்தவரை நன்மையையே அளிக்கும் என்பது சோதிட நூல்களின் கருத்து, ஒருவனுக்கு செல்வமும் புகழும் கிடைக்க வேண்டுமென்றால், ஒன்று அது தனது மூதாதையர் அல்லது தந்தை வழியாகக் கிடைக்க வேண்டும் அல்லது தான் செய்யும் பணியின் காரணமாகக் கிடைக்க வேண்டும். இங்கு ஒன்பதாம் இடம் என்பது தந்தைக்கு உரியது என்பதையும் கவனத்தில் கொண்டால், ஒரு சாதகருக்கு பாக்கியம் என்பது தந்தை வழியிலும் கிடைக்கும்.


அதுபோல், ஒருவரின் வாழ்க்கை என்பது அவர் சார்ந்திருக்கும் தொழிலின் அடிப்படையிலேயே சிறப்புடனோ அல்லது சிறப்பு குன்றியோ அமையக் கூடும். இராசியில் 10-ம் இடம் என்பது தொழிலினைக் குறிக்கும் என்பதை அறிவோம். தொழில் மேன்மை என்பது 10-ம் இடத்தினைச் சார்ந்தே இருக்கும். எனவே ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய செல்வம் அல்லது புகழ் என்பது தொழிலைச் சார்ந்தும் இருக்கும். அதாவது 10-ம் இடம் என்பது 9-ம் இடத்தோடு தொடர்பில் இருப்பது சிறப்பாக இருக்கும்.


இராசியில் 9-ம் இடம் என்பது முக்கோணத்தில் (திரிகோணத்தில்) மூன்றாவது கோணம் ஆகும். திரிகோண வீடுகளில் மூன்றாவது கோணமான 9-ம் வீட்டின் தனித்துவத்தினை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதே போல, இராசியின் நாற்கரங்களில் (கேந்திரங்களில்) நான்காவது கேந்திரம் அல்லது நான்காவது நாற்கரத்தின் தனித்துவத்தையும் பதிவு செய்துள்ளோம். நான்காவது கேந்திரம் என்பது 10-ம் வீடு என்பது நாம் அறிந்ததே. ஆக 9-வது வீடும் 10-வது வீடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதுடன் சிறப்பானது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஒன்பது மற்றும் பத்து ஆகிய இந்த இரண்டு வீடுகளின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பு அல்லது பார்வைகள் சோதிடத்தில் சிறப்பான பலன்களைக் கொடுக்கின்றன. இந்த அமைப்பிற்கு தர்மகர்மாதிபதி யோகம்என்று பெயர். அதாவது ஒன்பதுதர்மம், பத்துகர்மம் ஆகிய இவற்றின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பு என்பதே தர்ம கர்ம அதிபதிகளின் யோகம் எனப்படுகிறது.


தர்மகர்மாதிபதி யோகம் எவ்வாறு அமையக் கூடும் என்பதைப் பார்ப்போம்

1.இலக்கினத்திற்கு ஒன்பதுபத்து வீடுகளின் அதிபதிகள் இணைந்திருப்பது

2.இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வது

3.ஒன்று மற்றொன்றைப் பார்ப்பது

4.இரண்டும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பது




எடுத்துக்காட்டாக-



இவைகள் எடுத்துக்காட்டு மட்டுமே. ஆனால் இணைவுகள் சேர்க்கைகள் (permutation & combination) அடிப்படையில் எண்ணற்ற சாதகங்கள் அமையக் கூடும்.


இவ்வாறு அமையப் பெற்றிருக்கும் சாதகர்கள், அதாவது தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் சாதக அமைப்பு உடையவர்கள்:-

      செல்வந்தர்களாக இருப்பர்

      தொழில் அதிபராக இருப்பர்

      அறிவாற்றல் மிக்கவராக இருப்பர்

      அறிவுரை வழங்குபவர்களாக இருப்பர்

      வெளிநாடு செல்லும் செல்வந்தராக இருப்பர்


ஆனால் நடைமுறையில் தர்மகர்மாதிபதி யோகம் பெற்றிருந்தும் மேற்சொன்ன பலன்கள் இல்லாத நிலையும் ஏற்படக்கூடும்


அதாவது, தர்மகர்மாதிபதி யோக அமைப்பு உடைய சாதகர்கள் மேற்கூறிய பலன்களை அடைய முடியாமல் போகும். அது ஏன்?



தர்மகர்மாதிபதி யோகம்..... தொடரும்

குறிப்பு: திரு ஓம் பிரகாஷ் அவர்கள் தெரிவித்த சில விளக்கங்களின்படி, எடுத்துக்காட்டு சாதகம் - 4ல், திருத்தம் மேற்கொள்ளவும் - தனுசுவில் சனி; மகரத்தில் குரு