Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, July 25, 2019

அம்ச மகா புருச யோகம் – வியாழனின் தொடர்பு



3. அம்ச மகா புருச யோகம் – வியாழனின் தொடர்பு

வியாழன், இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து நாற்கர வீடுகளான (கேந்திர வீடுகளில்) இருக்கும் நிலையில் அந்த வீடானது வியாழனின் ஆட்சி அல்லது உச்ச வீடுகளாக இருந்தால், அது அம்ச மகா புருச யோகம் எனப்படும். இங்கு குறிப்பிட்டு சொல்வதென்றால், வியாழனானது தனுசு அல்லது மீனம் அல்லது கடகத்தில் இருக்க வேண்டும். அந்த வீடானது இலக்கினம் அல்லது சந்திரனுக்குக் கேந்திரமாகவும் இருக்க வேண்டும்.





மேலே உள்ள அமைப்புகள் அனைத்தும் அம்ச மகா யோக அமைப்பு உடையவைதான். ஆனால், 2-வது எடுத்துக்காட்டில், வியாழன் தனது ஆட்சி வீடான தனுசுவில் சந்திரனுக்கு 7-லும் இலக்கினத்திற்கு 4-லும் உள்ளதைக் கவனிக்க வேண்டும். அது இரட்டை அம்ச மகா யோகம் எனும் நிலையில் உள்ளது. வேறொறு கோணத்தில் ஆராய்ந்து பார்க்கையில் இலக்கினத்திற்கு 4-ல் தனது சொந்த வீட்டில் உள்ள நிலையில் கேந்திர ஆதி பத்திய தோசம் எனும் நிலையில் உள்ளதாகவும் கொள்ளலாம். (கேந்திர ஆதி பத்திய தோசம் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்)..

அம்ச மகா யோகத்தின் பலன்கள்:
1.   நல்ல குணம் உடையவர்கள்
2.   புத்திக் கூர்மை
3.   பிறருக்கு அறிவுரை கூறுதல்
4.   பெரியோரை மதித்தல்
5.   பிறரால் மதிக்கப்படுதல்

பஞ்ச மகா யோகங்கள் தொடரும்.


Wednesday, July 24, 2019

பத்ர மகா புருச யோகம் – புதனின் தொடர்பு



2. பத்ர மகா புருச யோகம் – புதனின் தொடர்பு

புதன், இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து நாற்கர வீடுகளான (கேந்திர வீடுகளில்) இருக்கும் நிலையில் அந்த வீடானது புதனின் ஆட்சி அல்லது உச்ச வீடுகளாக இருந்தால், அது பத்ர மகா புருச யோகம் எனப்படும். இங்கு குறிப்பிட்டு சொல்வதென்றால், புதனானது மிதுனம் அல்லது கன்னியில் இருக்க வேண்டும். அந்த வீடானது இலக்கினம் அல்லது சந்திரனுக்குக் கேந்திரமாகவும் இருக்க வேண்டும்.




மேலே உள்ள அமைப்புகள் அனைத்தும் பத்ர மகா யோக அமைப்பு உடையவைதான். ஆனால், 5-வது எடுத்துக்காட்டில், புதன் சந்திரனுக்கு 4-ல் இருந்தாலும், இலக்கினத்திற்கு 8-ல் உள்ளதையும், 6-வது எடுத்துக்காட்டில், புதன் சந்திரனுக்கு 7-ல் உள்ளதையும், இலக்கினத்திற்கு 6-ல் உள்ளதையும் கவனிக்க வேண்டும். அதாவது, இங்கு பத்ர மகா யோக அமைப்பினைச் சந்திரன் கொடுக்க முயன்றாலும், இலக்கினத்திற்கு மறைவில் (8, 6) இருப்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக 6வது எடுத்துக்காட்டில், புதன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய நிலையில் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும், இலக்கினத்திற்கு 6-ல் இருப்பது பத்ர மகா யோக பலன்களை முழுமையாக வழங்காது என்பதே உண்மை. அதே வேளையில், புதனின் மறைவானது, மறைந்த புதன் நிறைந்த கல்வி எனும் நிலையினை வழங்கும். ஆக முன்பே கூறியபடி, யோக அமைப்பினைக் கவனிக்கும்போது பிற நிலைகளையும் கவனிக்க வேண்டும்.

பத்ர மகா யோகத்தின் பலன்கள்:
1.   நீண்ட ஆயுள்
2.   புத்திக் கூர்மை
3.   பெரியோரின் பாராட்டு
4.   செல்வ நிலை
5.   தலைமைப் பண்பு
6.   தர்ம சிந்தனை

பஞ்ச மகா யோகங்கள் தொடரும்.

Thursday, July 18, 2019

மீண்டும்..



காலம் வியப்பிற்குரியது

சில நேரம் நம்மை கை கோர்த்து அழைத்து செல்லும்

சில நேரம் நம் கை தவிர்த்து விரைந்து செல்லும்

காலத்தின் காலடிச் சுவடோடு இணைந்து ஓடுபவன் வெற்றி பெறுகிறான்

காலம் என்னைச் சற்று ஓய்வெடுக்க வைத்தது

நிமிர்ந்து விழித்தபோது “நேற்று” எனும் நிலையில் நான்

எட்டிப்பிடித்து “இன்று” கை கோர்க்க முயல்கிறேன்

நம்பிக்கை தானே வாழ்க்கை

மீண்டும் உங்கள் நிமித்திகன்

பதிவுகளோடு ….  …..  …..  

Wednesday, February 13, 2019

திருட்டு சோதிடனுக்கு தெய்வீக ஜோதிடர் என்று பெயரா?



திருட்டு சோதிடனுக்கு தெய்வீக ஜோதிடர் என்று பெயரா?

அன்பு நண்பர்களுக்கு, தவிர்க்க முடியாத சில காரணங்களாலும், உடல் பிணியின் காரணமாகவும் நீண்ட நெடு நாட்களாக நிமித்திகனில் பதிவு எதுவும் செய்யவில்லை.

நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் யாவரும் பயன் அடையும் வகையிலேயே எழுதி வருகிறேன்.

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா எனும் நூலை, திரு சிதம்பரம் அய்யர் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் (1880) செய்திருந்ததை, தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். அதற்காக நான் எடுத்துக்கொண்ட கால அளவானது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள்.

இன்று (12.02.2019) கூகுளில் சோதிடம் தொடர்பாக ஒரு செய்தியைத் தேடியபோது, எதேச்சையாக பிருகத் ஜாதகம் பற்றிய பதிவு தென்பட்டது. அது வேறொருவரின் பெயரில் முகநூலில் வந்துள்ளது. அது அப்படியே எனது மொழிபெயர்ப்பின் பதிவினை அச்சு பிசகாமல் வந்துள்ளது.

அந்த முகநூலின் உரிமையாளர் (Admin) குருஜி ஹரிராம்  தெய்வீக ஜோதிடர்.  Guruji Hariram  தெய்வீக ஜோதிடர்.

அதிர்ச்சி அடைந்த நான் அவரின் முகநூலில் சென்று பார்த்த போது, எனது பிருகத் ஜாதக மொழி பெயர்ப்பு பதிவுகள் அனைத்தும் (நான் பார்த்த வரையில் இரண்டு அத்தியாயங்கள் - ஏறக்குறைய 40 பதிவுகள்) அவரது பதிவுபோல் வெளியிடப்பட்டிருந்தது.

எடுத்துக்காட்டிற்கு கீழே உள்ள ஒரு பதிவினைப் பாருங்கள்.



இந்த அறிவுத் திருடனை என்னவென்று திட்டுவது அல்லது எதைக் கொண்டு அடிப்பது. நீங்கள்தான் கூற வேண்டும்.

அன்புடன்
நிமித்திகன்



Tuesday, January 15, 2019


அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்!