வணக்கம்,
நிமித்திகன் பதிவிட்டு
நெடு நாட்கள் ஆகிவிட்டது. நான் ஏற்கனவே சொன்னது போல், முதலில் என் அலுவல் பணி, பிறகுதான்
மற்றவை. ஆண்டுக் கணக்கு முடிவில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த எனக்கு, தேர்தல்
சிறப்புப் பணியும் அளிக்கப்பட்டதில், முழு ஈடுபாட்டை பணியில் காட்ட வேண்டியதாகிவிட்டது.
ஒருவழியாக ஓட்டு எண்ணிக்கை முடிந்து, அதிலிருந்து விடுபட்டேன். ஆனாலும் மறுபடியும்
சிக்கல். இப்போது தேர்விற்கு தயாராக வேண்டி இருந்தது. ஆம். சோதிடம் தொடர்பான தேர்வு.
என்ன தேர்வு என்பது வெற்றி பெற்ற பிறகு சொல்லுகிறேன். ஆனால் ஏன் தேர்வு என்று சொல்லி
விடுகிறேன்.
சோதிடம் பற்றி நிமித்திகனில்
எழுதப்போவதை நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் சில தகவல்களைச் சொன்னார். முதலில்
சோதிடத்தைப் படி, அதற்கு உன்னைத் தகுதியாளனாக மாற்றிக் கொள் என்றார். தகுதி என்றால்
? நீயாக புத்தகங்களைப் படிப்பதைவிட, உன்னை ஒரு தேர்விற்கு தகுதி படுத்திக் கொள். கண்டிப்பாக
கொடுத்த பாடங்கள் அனைத்தையும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதையும் ஆய்வு செய்கையில்,
அது பற்றிய முறையானக் கல்வித் தகுதி வேண்டும் என்றார். என் கருத்தும் அதுதான். (அதற்கும்,
அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்களின் கல்வித் தகுதிக்கும் ஒப்பீடு வேண்டாம்). எனவே சோதிடம்
பற்றிய ஒரு படிப்பில் சேர்ந்தேன். தேர்வும் முடிந்துவிட்டது.
அந்தத் தேர்விற்காக
படித்த போது, நான் அறிந்து கொண்டது நிறைய. சோதிடம் என்பது பிறப்பு சாதகம் மட்டும் அல்ல,
அதற்கும் மேல் நிறைய உண்டு என்பதும், அவற்றில் சில கணிதச் சமன்பாடுகளிலும், வேறு சில
கருத்திற்கு ஒவ்வாத தன்மையிலும் இருந்தன. இருப்பினும் தேர்விற்காக அனைத்து பாடங்களையும்
படித்தேன். நான் படித்தவற்றில் சில: பிறப்பு சாதகம், அஷ்டவர்க்கம், ஷட்பலம், தாஜிகம்,
முண்டன் (இகலோகம்), சம்ஹிதை, பிரசன்னம், முகூர்தம், வாஸ்து, எண் கணிதம், கை ரேகை, இரத்தினங்கள், மேல்நாட்டு முறை சோதிடம்.
இவற்றைப் படிக்கும்போதே சிலவற்றின் மீது ஆரம்ப நிலையிலேயே ஒப்புதல் இல்லை. வேறு சில
ஆய்வு செய்யப்பட வேண்டியவையாக இருந்தன. சில ஆச்சரியாமாகவும் இருந்தன.
நிமித்திகன் பதிவில்
இவற்றைப் பற்றியும் தேவைப்படும்போது எழுதுகிறேன். மீண்டும் சொல்லுகிறேன், நிமித்திகன்
ஆய்வு நோக்கில் எழுதப்படும் வலைப்பதிவு. எனக்கு நேரம் கிடைக்கும்போது பதிவுகள் பதியப்படும்.
இது வார இதழில் வரும் தொடர்கதை அல்ல. குறிப்பிட்ட வாரத்திற்குள் முடித்துவிட வேண்டும்
எனும் கட்டாயம் ஏதும் இல்லை. மெல்ல தொடர்வேன். முதலில் என் அலுவல் பணி. பிறகுதான் நிமித்திகன்.
ஆனாலும் முடிந்தவரை நிறைய பதிவுகள் இட முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
நிமித்திகன்
No comments:
Post a Comment