Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, June 26, 2016

குரு (எ) வியாழன்- சோதிட வரையறை .. தொடர்ச்சி



சென்ற பதிவில், வியாழனின் இயல் தன்மைகளைப் பார்த்தோம். வியாழனின் இயல் தன்மைகளில் முதன்மையானது அது ஒரு மிகப்பெரிய வாயுக் கோள் என்பதாலும், அதன் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைவிட அதிகம் என்பதாலும், அயல் பொருட்கள் எனும் சூரியக் குடும்பத்திற்கு அப்பாலிருந்து வரும் தூசுகள், குரும்பாறைகள், குறுங்கோள்கள் என அனைத்தையும் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதாவது, நம் சூரியக் குடும்பத்தின் பிறக் கோள்களை, குறிப்பாக தற்போதைய கணிப்பின்படி, உயிர்கள் வாழக்கூடிய தகுதி உடைய நமது பூமியை, அத்தகைய அயல்பொருட்கள் மோதாமல் காக்கும் தொழிலைச் செய்து வருகிறது. ஆக, ஒரு பாதுகாவலனாக, மிகச் சிறந்த பணியை வியாழன் செய்து வருகிறது.

சோதிடத்தில் வியாழனின் பங்கினை மிகவும் சிறப்புடனேயே அனைத்து சோதிட நூல்களும் வரையறை செய்கின்றன.

வியாழனின் சோதிட பொது வரையறைகள்

ஆசிரியர்

முன்னோர்கள்

வித்தை

தர்மம் அல்லது நியாயம்

கல்வி

நல்ல சிந்தனை

திருமணம்

குழந்தைப்பேறு

பொது வரையறைகள் எனும்போது, இவற்றின் நீட்சிகளும் உள்ளடங்கியதே. ஒவ்வொரு சோதிட நூல்களிலும் வியாழனின் பல்வேறு காரகத்துவங்கள் கூறப்பட்டுள்ளன. மகாக்கவி காளிதாசரின் உத்திர காலாமிர்தம் (உரை: திரு சதாசிவம்) நூலில், குருவின் காரகத்துவங்களாக 86 செயல் திறன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் மேலே குறிப்பிட்ட பொதுவரையில் அடங்கிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, தெய்வம், முப்பாட்டன், தாத்தா என்பன முன்னோர்களில் அடங்கிவிடுகிறது. மூளை, புகழ், தர்க்கம், கீர்த்தி, சோதிடம், வேதாந்தம் என்பன வித்தையில் அடங்கிவிடுகிறது. தர்மம், விருப்பு வெறுப்பின்மை, தவம், உதவி என்பன நியாயத்தில் அடங்கிவிடுகிறது. அதே வேளையில் நீட்சிகளை அனைத்து சோதிட நூல்களும் பொதுவாகக் கொண்டிருப்பதில்லை. மாறுபாடும் காணப்படுகிறது. இனி வியாழனின் பொதுவரையறையினை ஆராய்வோம்.

      வியாழனின் பொது வரையறையில் அடங்கியவற்றை, அதன் வானியல் தன்மைகளோடு ஒப்பு நோக்குதல் என்பது சற்று சிரமமாகவே உள்ளது. தர்க்கமுறையில் வேண்டுமானால் ஒப்பிட முடிகிறது.

எடுத்துக் காட்டாக,

(1)  சூரியக் குடும்பத்தில் முதலில் தோன்றிய கோள் வியாழன். எனவே, நமது பூமி உட்பட அனைத்துக் கோள்களுக்கும் முன்னோடி வியாழன். எனவே, முன்னோர்கள், ஆசிரியர் ஆகியவற்றிற்கு வியாழன் காரகத்துவம் கொண்டுள்ளது என்பது தர்க்க முறையில் பொருந்துகிறது.

(2)  வித்தை அல்லது கல்வியைப் பொருத்தவரையில் ஒப்பு நோக்குதல் சற்று சிரமமாகவே உள்ளது. தொன்று நிகழ்ந்தவை, இன்றும் நிகழ்பவை ஆகியன பதிவுகளாக்கப்பட்டு,அவற்றோடு சாதகத்தில் வியாழனின் நிலைப்பாட்டினை பன்னெடுங்காலம் தொடர்புபடுத்தி, ஒரு வரையறை சோதிட அறிஞர்கள் வரையறை செய்திருக்கலாம்.

(3)    திருமணம் மற்றும் குழந்தைப் பேறு என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. உடலில் வேதிச் சமன்பாடின்மை (chemical imbalance) என்பது கரு உண்டாதலுக்கு தடையாக இருப்பதாக அறிவியல் நூல்கள் கூறுகின்றன. வியாழனைப் பொருத்தவரையில், மற்றக் கோள்களைக் காட்டிலும், பல்வேறு வேதிப்பொருட்களைக் [விகித அளவில் குறைவாக இருந்தாலும்] கொண்டிருக்கிறது. ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன், அம்மோனியா, கரியமிலம், ஈதேன், ஹைட்ரஜன் சல்பேட், நியான், ஆக்சிஜன், பாஸ்பின், கந்தகம், பென்சீன், ஹைட்ரோகார்பன், போன்றவை வியாழனில் உள்ள வேதிப்பொருட்கள். எனவே, வேதிச் சமநிலை என்பது வியாழனில் அதிகமாகவே உள்ளது. தர்க்க முறையில் இது சரியாக இருக்கலாம். அங்கு வேதி சமநிலை இருப்பதற்கும், இங்கு ஒரு பெண்ணிற்கு கரு உண்டாவதற்கும் எப்படி முடிச்சு போடலாம் எனும் கேள்வி எழுவது சாத்தியமே. சாத்தியமாக இருக்கலாம், அல்லது இருக்க வேண்டும் என்பதே எனது பதிவு. அதற்கு அடிப்படைக் காரணம் ஒவ்வொரு கோளும் கொண்டிருக்கும் காந்தப்புலமாகவும் அல்லது அதன் கதிர் வீச்சு தன்மையுமாகவும் இருக்கலாம். [அது பற்றி பின்னர் விரிவாக பதிவிடுவோம்].

இங்கு, வியாழனை நாம் ஒரு கோளாக மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். வேறு வகையில் வியாழனை வரையறை செய்தால் அது பிழையாகப் போய்விடும். வியாழனை மதம் சார்ந்த கடவுளாகக் கணக்கில் கொண்டால், சோதிடத்தின் நம்பகத்தன்மையை இழந்துவிட நேரிடும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் சோதிடம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றால், அதனை அறிவியல் கணிதம் என்று சொல்லுவது பொருளற்றதாகிவிடும். அதனை அறிவியல் கணிதம் என்று சொல்லவேண்டுமென்றால் அதனைப் பொதுவில் வைக்க வேண்டும். அதாவது அது உலகம் முழுமையிலும் உள்ள பல்வேறு மத நம்பிக்கை உடையவர்களுக்கும் மற்றும் மதத்தின்மீது அல்லது கடவுளின்மீது நம்பிக்கை அற்றவர்களுக்கும் ஏற்புடையதாகவும், நிரூபிக்க முடிந்ததாகவும் இருக்க வேண்டும்.

இந்த பொது வரையறைகள் நிகழ்தகவின் அடிப்படையில், முன்னோர்கள் கண்டுணர்ந்து, கேட்டுணர்ந்து பதிவு செய்தவை என்பதையும் மறந்துவிடக் கூடாது.


அடுத்து…. சுக்கிரன் (எ) வெள்ளியின் சோதிட வரையறை


No comments: