Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, December 15, 2013

இது நம்ம பூமி


     “பெரிது பெரிது புவனம் பெரிது, புவனமோ நான்முகன் படைப்பு” என்று அவ்வையார் பாட்டு சொல்கிறது. நான்முகன் படைத்தாரா என்பதைக் காட்டிலும், புவனம் (பூமி) பெரிது என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.

இது நம்ம பூமி

     நம் முன்னோர்கள் தங்கள் பதிவுகளில் புராண இதிகாசங்களுக்கும் இலக்கியத்திற்கும் சமய நம்பிக்கைகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தினை தாங்கள் அறிந்த அறிவியல்  நிகழ்வுகளுக்குக் கொடுக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. உலகம் தட்டையானது என தாலமி தவறான கொள்கை வகுப்பதற்கு முன்பே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகம் உருண்டை அது சுழல் தன்மைக் கொண்டது என தனது குறளில் போகிறபோக்கில் சொல்லிச் சென்றவர் திருவள்ளுவர். “சுழன்றும் ஏர்பின்னது உலகம்” எனும் அவரது குறள் அதனைச் சொல்லும். ஆனால் உலகம் உருண்டை என கலிலியோதான் முதன் முதலில் சொன்னதாக நமது பள்ளி பாடங்களில் படிக்கும்போது, நமது முன்னோர்களின் வானியல் அறிவு சரியாகப் பதியப்படவில்லை என்பதே உண்மை. பதியப்பட்ட பதிவுகளும், பின்னர் சமயக் கடவுள்களுடன் பிணைக்கப்பட்டு, உருமாற்றம் அடைந்தன. அதாவது அறிவியலும் ஆன்மீகமும் இரண்டறக் கலந்து, ஆன்மீகமானது அறிவியல் உண்மைகளை தன்வசப் படுத்திக் கொண்டது. எளிதில் புரிந்துகொள்ள கையாளப்பட்ட உவமைகள் கருப் பொருளாயின. கருப் பொருள் மறைந்து போயிற்று. சுழன்றும் ஏர் பின்னதில், உலகம் சுற்றுகிறது என்பது அன்றைய காலத்தில் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால் தான் அதை எடுத்துக்காட்டாக வள்ளுவன் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால், அவர் காலத்திற்கும் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்பாகவே அந்தக் கருத்து வழக்கில் இருந்திருக்க வேண்டும். எனவே உலகம் உருண்டை, அது சுழல்கிறது என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே நமது முன்னோர்கள் தெரிந்து வைத்துள்ளனர் என்பதை நாம் தெரியாமல் உள்ளோம் என்பதே உண்மை.

சரி, பூமியைப் பற்றி பார்ப்போம்.

     பொதுவாக நமது சூரியக் குடும்பத்தின் கோள்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் கிரேக்கம் அல்லது ரோமன் வார்த்தைகளிலிருந்து வைக்கப்பட்டவை. ஆனால் “எர்த்” எனும் ஆங்கில வார்த்தை மட்டும் ஜெர்மனியிலிருந்து வந்த வார்தை என்று படித்ததாக ஞாபகம்.

  நீல பளிங்குக் கோள் எனப்படும் பூமி, சூரியனிலிருந்து மூன்றாவது கோள். எட்டு (ஒன்பது) கோள்களில் ஐந்தாவது பெரிய கோள். வெள்ளியைவிட சற்றே பெரியது. திட நிலையில் உள்ள நான்கு கோள்களில் பூமிதான் மிகப் பெரியது. உயிரினம் வாழக் கூடிய சூழல் உள்ள ஒரே கோள் நமது பூமிதான் என்பது தற்போதையக் கருத்து.

     பூமி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு உருவாகி இருக்கக்கூடும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பாறைகளும் மலைகளும் 3.50 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவாகியிருக்கக் கூடும் என புவியியலாளர்கள் கூறுகிறார்கள்.

     பூமி திடக்கோள் என்றாலும், 71% நீராலும் 29% நிலப்பரப்பாலும் அமையப் பெற்றுள்ளது. கடினப் பாறைகள், நெகிழ்வுப் பாறைகள், பாறை அடுக்குகள் என கடினப்பட்டு இருந்தாலும், பூமியின் மையப் பகுதியானது நெருப்புக் குழம்பாய் உள்ளது. ஆனால் பூமியின் வட தென் துருவங்கள் பனிப் பாறைகளால் அமையப் பெற்றுள்ளது.

     பூமியின் காற்று மண்டலம், 77% நைட்ரஜனும், 21% ஆக்சிஜனும் மற்ற வாயுக்கள் 2% சூழ்ந்த நிலையில் உள்ளது.  பூமியில் உள்ள தாதுக்களில் இரும்பு பெருமளவில் உள்ளது. சிலிகான் எனும் மணல், மெக்னீசியம், நிக்கல், கந்தகம், டைட்டானியம் அடுத்த நிலையில் உள்ளது.

     புவியின் ஈர்ப்பு விசையானது, வான் மண்டலத்தின் பிற பொருட்களின் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறது என்பர். அதே போல், பிற பொருட்களின் ஈர்ப்பு விசையும் பூமியின் மீது தாக்குதலை உண்டாக்குகிறது என்பர்.

பூமி - சில தகவல்கள்:

  • -    சூரியனிலிருந்து 14,96,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • -    விட்டம் 12756 கி.மீ., நிறை 5.98e24 கி.கி.
  • -    தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது (24.00 மணி நேரம்)
  • -    சூரியனையும் சுற்றி வருகிறது (365.26 நாட்கள்)
  • -    மேற்கிலிருந்து கிழக்காக சுற்றி வருகிறது
  • -    உருண்டையானது என்று சொன்ன போதிலும், மேலும் கீழும் சிறிது தட்டி வைத்த களிமண் உருண்டை என்பதே சரியான வடிவம்.
  • -    பூமியின் பெரும் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.
  • -    பூமியின் மையம் நெருப்புக் குழம்பாய் உள்ளது. அதன் வெப்பம், சூரியனின் மேற்பரப்பு வெம்மையைக் காட்டிலும் அதிகம்.
  • -    உயிர் வாழக்கூடிய ஆக்சிஜன் அளவு பூமியில் மட்டுமே உள்ளது
  • -    உயிரினங்கள் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கக்கூடும் என உயிரியிலாளர் கூறுகின்றனர்.
  • -    இன்னமும் கண்டுபிடிக்காத கடல் உயிரினங்களும் தாவரங்களும் ஐந்து மில்லியனுக்கும் கூடுதலாக இருக்கக் கூடும் என்கின்றனர்.
  • -    பூமிக்கு சந்திரன் ஒரு துணைக்கோள் என்றாலும், ஆஸ்ட்ராய்டுகள் எனும் விண்பொருட்களும் பூமியைச் சுற்றி வருகின்றன.
  • -    பூமி தனது (கற்பனை) அச்சிலிருந்து 23.4 பாகை சாய்வாக இருப்பதால், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. 
  • -    பூமியின் சுழற்சியாலும், பூமியில் உள்ள நிக்கல்-இரும்பின் அடுக்குகளாலும், காந்தப் புலம் ஏற்படுகிறது,
  • -    காந்தப்புலம், சூரியக் காற்றினால் தாக்கப்படுவதால், இருபுறமும் ஒரு கவிழ்ந்த வலைப்பின்னலில் உள்ளது.
  • -    காந்தப்புலம் வட தென் துருவங்கள் எனும் அமைப்பில் உள்ளது.
  • -    பவுர்னமி அமாவாசையின் போது சந்திரனாலும், சூரியனாலும் தாக்குதலுக்கு உள்ளாவது கடல் மட்டுமல்ல நிலப் பரப்பும் என்பது அறிவியல் உண்மை.



அடுத்து – பூமியின் துணைக்கோள் - சந்திரன்
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)

அவன் - இவன்
அவன் :
அடுத்து எப்போது? இன்னும் பத்து நாள் ஆகுமா?
இவன் :
வராது ஆனா வரும்



Tuesday, December 3, 2013

விடி வெள்ளி


     இது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள். மாலுமிகளின் நம்பிக்கை நட்சத்திரம். இது விடியலிலும் மாலை நேர இரவிலும் வானில் தெரியும் ஒரு வழி காட்டி. சூரியன் உதிப்பதற்கு முன்பே வெள்ளி முளைப்பதால், இதனை விடிவெள்ளி என்று அழைப்பர். 

     ஏறக்குறைய பூமியின் அளவு உள்ள கோள். அதனால் இதனை பூமியின் தங்கை என்றும் அழைப்பர். இது ஒரு திடக் கோள். கரியமில வாயுவால் சூழப்பட்ட சுற்றுச் சூழல். எரிமலைக் குழம்பின் காயங்கள் காய்ந்த வடுக்களாக பரவிக் கிடக்கும் மேற்பரப்பு. 

    கிழக்கிலிருந்து மேற்காக தன்னைச் சுற்றிக் கொள்வதால், சூரியன் மேற்கில் உதிக்கும். அயல் வான் குடும்ப தின்ம பொருட்கள் மோதியதால், இது தன் சுழல் தன்மையில் மாறியிருக்கக் கூடும் எனும் கருத்தும் உண்டு.



வெள்ளியின் மேற்பரப்பு

வெள்ளி - சில குறிப்புகள்:

  • ·         சூரியனிலிருந்து ஏறக்குறைய 108 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
  • ·         தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 243 நாட்கள் ஆகும். ஒரு நாள் போவது ஒரு யுகம் போவதுபோல் என்பது வெள்ளியில் பொருந்தும்.
  • ·         சூரியனைச் சுற்றிவர 225 நாட்கள் ஆகும்.
  • ·         துணைக்கோள்கள் எதுவும் கிடையாது.
  • ·         கரியமிலவாயு, நைட்ரஜன் மற்றும் கந்தக சாம்பல் கொண்டது.
  • ·         480 செல்சியஸ் வெப்பம் நிலவும். ஈயம் எளிதில் உருகும் வெப்ப நிலை.
  • ·         சூரியக் குடும்பத்திலேயே அதிக வெளிச்சம் தரும் கோள். [சந்திரன் அதிக வெளிச்சம் தந்தாலும் அது கோள் அல்ல]
  • ·         சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ளதால் இதுவும் சூரிய கிரகணத்தை ஏற்படுத்தும், ஆனால் சிறு புள்ளியாக.
  • ·         ஒரு காலத்தில் நீர் இருந்திருக்கலாம் எனவும், அது அதீத வெப்பம் காரணமாக ஆவியாகி இருக்கக்கூடும் என வான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • ·         புதனைப் போல் வெள்ளியும் இரும்பின் கூழினை உட்கருவாகக் கொண்டிருக்கிறது.
  • ·         பூமியைப் போல் பெரிய அளவில் காந்தப்புலம் இல்லையென்றாலும், இதற்கும் காந்தப்புலம் உண்டு.
  • ·         கரியமிலமும் கந்தகமும் உள்ள சூழலில் உயிரினம் வாழ்தல் சாத்தியமில்லை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


……. அடுத்து நம்ம பூமி
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)



அவன் - இவன்
அவன் :
ஊருக்கு போனவர் திரும்பி வந்திட்டாரா ? அப்ப தினமும் பதிவு உண்டுன்னு சொல்லு.
இவன் :
கண்டிப்பா வாரம் ரெண்டு உண்டாம். அதில்லாமல் வராகமிகிரரின் பிருகத் ஜாதகா தமிழாக்கமும் விரைவில் பதியப் போகிறாராம்.