Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, February 18, 2017

சட்பலம் – ஒரு தொகுப்பு


சட்பலம் – ஒரு தொகுப்பு

      இதுவரையில், சட்பலம் எனப்படும் கோள்களின் ஆறு வகையான வலிமைகளைப் பார்த்தோம். அவற்றின் தொகுப்பாக –

Ø  கோள்களின் வலிமை என்பதை அவை இருக்கும் வீடுகள், காரகத்துவங்கள், பார்வைகள், உச்சம், நீச்சம், நட்பு, பகை நிலைகள் ஆகிய நிலைகளை வைத்துமட்டும் தீர்மானித்துவிடக்கூடாது.

Ø  ஒரு கோளின் வலிமையை, பல்வேறு கணிதங்களைச் செய்தே முடிவு செய்ய வேண்டும் என சோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆறுவகை வலிமைகளைக் கண்டறிய வேண்டும் என கூறுகின்றனஅதனை வடமொழியில் சட்பலம் எனக் குறிப்பிடுகின்றன.

Ø  சட்பலம் (அ) ஆறுவகை வலிமை என்பது -

(1)    வீட்டினில் வலிமை () ஸ்தான பலம்
(2)    திசையினில் வலிமை () திக் பலம்
(3)    காலத்தில் வலிமை () கால பலம்
(4)    நகர்வில் வலிமை () சேஷ்டா பலம்
(5)    இயற்கையில் வலிமை () நைசர்க்கிக பலம்
(6)    பார்வையின் வலிமை () திருக் பலம்

Ø  ஸ்தான பலம் - கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை என்பது

(1)    உச்சம்
(2)    மூலத் திரிகோணம்
(3)    ஆட்சி
(4)    நட்பு
(5)    பகை
(6)    கேந்திரம்
(7)    திரிகோணம்
(8)    பணமரம்
(9)    ஆபோக்லிமம்
ஆகிய நிலைகளைக் கண்டு கணக்கிடப்படுகிறது

Ø  திக் பலம் (அ) திசையினில் வலிமை என்பது -

இராசிகள் பெறும் பலம் என்பதிலிருந்து மாறுபட்டு, இலக்கினத்தில் தொடங்கி நான்கு நாற்கரங்கள், அதாவது நான்கு கேந்திரங்களில் திசைகளை வரிசைப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இடங்களில் அல்லது திசைகளில், குறிப்பிட்ட கோள்கள் வலிமை பெறுவதாகவும், அல்லது வலிமை இழப்பதாகவும் கணக்கிடப்படுகிறது.

Ø  கோள்கள் திசைகளில் பெறும் வலிமை சஷ்டியாம்சம் எனும் கணித அளவீட்டில் கணக்கிடப்படுகிறது.

Ø  அவ்வாறு கணக்கிடப்படுவதில், அதிக சஷ்டியாம்ச புள்ளிகள் பெறும் கோள்கள் அதிக வலிமையும், குறைந்த புள்ளிகள் பெறுபவை குறைவான வலிமையும் பெறுகின்றன.

Ø  கால பலம் (அ) காலத்தில் வலிமை

Ø  இதன்படி, சாதகர் பிறந்த பொழுதினை அடிப்படையாகக் கொண்டு கோள்களின் பலம் அறியப்படுகிறது - அதாவது

(1)  நடு நிசி – நடு பகல் வலிமை (அ) நத உன்னத பலம்
(2)  வளர் பிறை – தேய் பிறை வலிமை (அ) பட்ச பலம்
(3)  பகல் – இரவு வலிமை (அ) தின இராத்திரி பலம்
(4)  ஆண்டின் வலிமை (அ) ஆப்த பலம் (அ) வருஷ பலம்
(5)  மாதத்தின் வலிமை (அ) மாத பலம்
(6)  கிழமையின் வலிமை (அ) வார பலம்
(7)  ஓரை வலிமை (அ) ஹோரா பலம்
(8)  நகர்வின் வலிமை (அ) அயன பலம்
(9)  யுத்தத்தில் வலிமை (அ) யுத்த பலம்

Ø  ஆக, கால பலத்தில் கோள்களின் வலிமையானது பல்வேறு கால நிலைகளில் உள்ள கோள்களின் வலிமையினை கணித முறைகளுக்கு உட்பட்டு வரையறை செய்வதாகும்.

Ø  சேஷ்டா பலம் (அ) கோள்களின் நகர்வின் வலிமை – என்பது

Ø  கோள்கள் தாம் சுற்றிவரும் நிலையில் பெறும் வலிமையினைக் குறிப்பதாகும்.

Ø  குறிப்பாக, சூரியன், சந்திரன் தவிர்த்து பிற கோள்கள் வக்கிர நிலையில் பெறும் வலிமையினைக் கணக்கிடுவதாகும்.

Ø  சேஷ்டா பலம் கணக்கிடப்படுவதின் நோக்கமானது, ஒரு கோள் வக்கிர நிலையில் இருப்பதால் மட்டுமே வலிமை குன்றியது என்றோ அல்லது உச்ச நிலையில் இருப்பதால் மட்டுமே வலிமை மிகுந்து இருக்கிறது என்றோ பலன் உரைத்துவிடக் கூடாது என்பதுதான்.

Ø  நைசர்க்கிக பலம் (அ) இயல்பில் வலிமை என்பது –

Ø  இயற்கையில் கோள்கள் அவைகளுக்கு இடையே பெற்றிருக்கும் வலிமையாகும்.

Ø  சோதிட நூல்களில் கோள்களின் இயல்பான வலிமையாக தெரிவிக்கப்பட்டிருப்பது – 
    சனியை விட செவ்வாய் வலிமை
செவ்வாயை விட புதன் வலிமை
புதனை விட வியாழன் வலிமை
வியாழனை விட வெள்ளி வலிமை
வெள்ளியை விட சந்திரன் வலிமை
சந்திரனை விட சூரியன் வலிமை

ஆக, அனைத்து கோள்களிலும் வலிமை மிக்கதாக சூரியனும் அதற்கு அடுத்து சந்திரனும் வரிசைப்படுத்தப் படுகின்றன.

Ø  இயல்பில் வலிமையானது கோள்களின் ஒளிர் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

Ø  நைசர்க்கிக வலிமையானது, கோள்கள் இருக்கும் இராசிகள் அல்லது பாவகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை.

Ø  நைசர்க்கிக வலிமையின் அளவானது, மாறிலி எனும் அடிப்படையில் எப்போதும், எந்த சாதகத்திற்கும், மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Ø  திருக் பலம் () பார்வையின் வலிமை என்பது -

Ø  கோள்களின் பார்வையின் வலிமை யாகும். திருக் பலம் என்பது, ஒரு கோளின் பார்வையால் மற்ற கோள்கள் பெறும் வலிமை என்பதாகும்.

Ø  சட் பலக் கணக்கீட்டில், கோள்களின் பார்வைகள் மட்டுமின்றி, ஒரு கோள், மற்றொரு கோளிலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதையும், அதாவது பார்க்கிறது எனும் கணக்கீடும் செய்யப்படுகிறது.

Ø  ஒரு கோளின் ஏழாம்பார்வை மற்றும் சிறப்புப் பார்வையும், முழுமையான வலிமையினைப் பார்க்கப்படும் கோள்களுக்கு கொடுக்கிறது.

Ø  அது மட்டுமின்றி, பார்க்கும் கோளிற்கும் பார்க்கப்படும் கோளிற்கும் உள்ள பாகைக் கணக்கீடும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Ø  கோள்களுக்கு இடையே உள்ள தூரங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன  என்பதுடன் ஒவ்வொரு கோளின் ஒளிவீச்சின் தன்மையும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

தொகுப்பாக – 

சட் பலம் என்பது, கோள்களின் வலிமையினை அவை இருக்கும் நிலையினைக் கொண்டு மிக நுணுக்கமாக ஆராயப்படும் நிலையாக உள்ளது. இது கோள்களின் வலிமையினை மிகத் துள்ளியமாக கணக்கிடும் முறையாக உள்ளது. ஆறுவகை வலிமைகளையும் ஒன்று கூட்டி சட்பலத்தின் மொத்த வலிமைக் கணக்கிடப்படுகிறது. கணக்கீடானது, பொதுவில் ரூபம் (அ) சஷ்டியாம்சம் எனும் அளவீட்டில் கணக்கிடப்படுகிறது.

சட்பலக் கணக்கீடானது, பெரும்பாலும் ஒரு ஒழுங்கானக் கணக்கீட்டில் அமைந்தாலும், சில கணக்கீட்டின் அடிப்படைத் தன்மைகள் எவ்வாறு வரையறை செய்யப்பட்டன என்பதற்கான கூறுகள் கிடைக்கப்பெறவில்லை. சோதிட நூல்களிலும், பொதுவாக சட்பலத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பலன் உரைப்பதில் துள்ளியம் குறைந்துபோவதற்கு, சட்பலக் கணக்கீட்டினைக் கவனத்தில் கொள்ளாததும் காரணமாக இருக்கலாம்.


அடுத்து – பலன்களை வரையறை செய்தல்

No comments: