Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, September 14, 2015

இராசிச் கட்டங்களும் வர்க்கக் கட்டங்களும்



            பொதுவாக சோதிடர்கள் இராசிக் கட்டத்தினை மட்டுமே வைத்துக் கொண்டு பலன் உரைக்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட இராசிக் கட்டத்தினைப் பல்வேறு கணக்கீட்டில், மேலும் பல வகையில் பிரிக்க முடியும் என்பதும், அவ்வாறு பிரித்து அறிவது, ஆழந்த ஆய்வுக்கு உதவும் என்பதனை நிறைய சோதிடர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதே உண்மை. அவ்வாறு பல்வேறு கட்டங்கள் உள்ளன என்பதைத் தெரியாத சோதிட விற்பன்னர்களும் உள்ளனர் என்பதும் உண்மை. மேம்போக்கான ஆய்வு என்பது தவறான ஆய்வாகப் போவதோடு மட்டுமின்றி, தவறான பலன்களையும் உரைக்கக் கூடும். சோதிடம் பொய்யாய் போவதற்கு உரிய காரணிகளில் இதுவும் ஒன்று.

            நமக்குப் பொதுவாக இராசிக் கட்டம்  மட்டுமே தெரியும். அந்த இராசிச் சக்கரத்தினை பல்வேறு பிரிவுகளாக ஒரு ஒழுங்கின் அடிப்படையில் பிரித்து கணிதம் செய்யும் முறைக்கு வர்க்கக் கட்டம் அல்லது வர்க்கச் சக்கரம் (Division) அல்லது அம்சச் சக்கரம் என்று பெயர். வர்க்கச் சக்கரம் என்பது வேறு வர்க்கக் கணிதம் (அஷ்டவர்க்கம்) என்பது வேறு. வர்க்கச் சக்கரம் அமைப்பதன் மூலம் ஒரு இராசிக் கட்டத்தினை (இராசிச் சக்கரத்தினை) இருபது வகைகளாகப் பிரிக்கலாம் என வகைப்படுத்தியுள்ளனர்.

            இராசிச் சக்கரம் என்பது, ஒருவர் பிறக்கும்போது இலக்கினம் மற்றும் கோள்கள் வான்மண்டலத்தில் இருக்கும் நிலையினைப் பதிவிடுதல் என்று பார்த்தோம். அதுதான் சோதிடக் கணிதத்திற்கு அடிப்படையும் ஆரம்பமும். அதனை அடிப்படையாகக் கொண்டே, வர்க்கச் சக்கர கணக்கீட்டு முறை செய்யப்படுகிறது.

            இராசிச் சக்கரம் முதற்கொண்டு, இருபது வகையாகப் பிரிக்கப்படும் வர்க்க முறையினை இங்கு அட்டவணைப்படுத்துவோம்.

எண்.
பிரிவு
பிரிவின் பெயர்
வர்க்கம்
பிரிவின் சுருக்கம்
1
D1
இராசி
முதன்மை
பிறக்கும்போது உள்ள கோள்களின் நிலை
2
D2
ஓரை
இரண்டு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 15 பாகைகளாகப் பிரிப்பது
3
D3
திரேக்கானம்
மூன்று
ஒரு இராசியின் 30 பாகைகளை, 10 பாகைகளாகப் பிரிப்பது
4
D4
சதுர்தாம்சம்
நான்கு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 7-30 பாகைகளாகப் பிரிப்பது
5
D5
பஞ்சமாம்சம்
ஐந்து
ஒரு இராசியின் 30 பாகைகளை, 6 பாகைகளாகப் பிரிப்பது
6
D6
சஷ்டாம்சம்
ஆறு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 5 பாகைகளாகப் பிரிப்பது
7
D7
சப்தாம்சம்
ஏழு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 4-17-8.57 பாகைகளாகப் பிரிப்பது
8
D8
அஷ்டாம்சம்
எட்டு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 3-45 பாகைகளாகப் பிரிப்பது
9
D9
நவாம்சம்
ஒன்பது
ஒரு இராசியின் 30 பாகைகளை, 3-20 பாகைகளாகப் பிரிப்பது
10
D10
தசாம்சம்
பத்து
ஒரு இராசியின் 30 பாகைகளை, 3 பாகைகளாகப் பிரிப்பது
11
D11
ஏகதசாம்சம்
பதினொன்று
ஒரு இராசியின் 30 பாகைகளை, 2-43-38 பாகைகளாகப் பிரிப்பது
12
D12
துவதாம்சம்
பன்னிரெண்டு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 2-30 பாகைகளாகப் பிரிப்பது
13
D16
சோடசாம்சம்
பதினாறு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 1-52-30 பாகைகளாகப் பிரிப்பது
14
D20
விம்சாம்சம்
இருபது
ஒரு இராசியின் 30 பாகைகளை, 1-30 பாகைகளாகப் பிரிப்பது
15
D24
சதுர்விம்சாம்சம்
இருபத்து நான்கு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 1-15 பாகைகளாகப் பிரிப்பது
16
D27
சப்தவிசாம்சம்
இருபத்து ஏழு
ஒரு இராசியின் 30 பாகைகளை, 1-6-40 பாகைகளாகப் பிரிப்பது
17
D30
திரிம்சாம்சம்
முப்பது
ஒரு இராசியின் 30 பாகைகளை, 5,10,18,25,30  பாகைகளாகப் பிரிப்பது
18
D40
கவேதாம்சம்
நாற்பது
ஒரு இராசியின் 30 பாகைகளை, 0-45-0 பாகைகளாகப் பிரிப்பது
19
D45
அக்ஷ்வேதாம்சம்
நாற்பத்து ஐந்து
ஒரு இராசியின் 30 பாகைகளை, 0-40-0 பாகைகளாகப் பிரிப்பது
20
D60
சஷ்டியாம்சம்
அறுபது
ஒரு இராசியின் 30 பாகைகளை, 0-30-0 பாகைகளாகப் பிரிப்பது

            ஆக இராசிச் சக்கரத்தினை இருபது வகைக் கணித முறையில், ஒரு ஒழுங்கான கணக்கீட்டின் அடிப்படையில் திரிம்சாம்சம் மட்டும் விதிவிலக்காக உள்ளது -  பிரித்து கணக்கிட்டுள்ளனர். இவ்வாறு பிரிக்கப்படுவதன் மூலம், ஒரு இராசிச் சக்கரத்தின் அமைப்பினைச் சிறு சிறு பகுதிகளாக பிரிப்பதன் மூலம் மிகத்துள்ளியமாக அறிய முயற்சித்துள்ளார்கள். இந்த இருபது முறையில் பிரிக்கப்படுவதை ஒரு சாதகக்கட்டத்தினை வைத்து விளக்க முற்படுவது இப்போது தேவையில்லை என்பதால் அதனைத் தவிர்த்துள்ளேன். தேவை ஏற்படும்போது அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.

            இவ்வாறு இருபது பிரிவுகள் இருக்கும் நிலையில், பொதுவாக நமது சோதிடர்கள் பயன்படுத்துவது முதல் பிரிவான இராசிச் சக்கரம், ஒன்பதாம் பிரிவான நவாம்ச சக்கரம் மட்டுமே. [தொழில் முறையில் சாதகப் பலன் உரைப்பதில், இத்தனைக் கணக்கீடுகளுக்கும் பலன் கண்டு உரைப்பதில் ஏற்படும் கால அளவிற்கேற்ப வருவாய்க் கிடைக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம்].

            நான் முன்பு எழுதிய பதிவின்படி, இவ்வாறு இருபதுவகையில் பிரிக்கப்படும்போது, அரை நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இருவரின் சாதகங்கள் கூட ஒன்றுபோல் மற்றொருவருக்கு இருக்க வாய்ப்பில்லை.

            இந்த இருபது வகை வர்க்கச் சக்கரங்கள் பலன் உரைக்கும்போது எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் அதன் நம்பகத்தன்மையினையும், அதுபற்றி எழுதும்போது விரிவாகப் பார்ப்போம்.

அடுத்து என்வகைக் கணிதம்