Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, November 18, 2016

இராசி பலன் உரைப்பது இப்படித்தானா?



இந்த பதிவை எழுதுவதில் சிறு சிக்கல் இருக்கிறது. தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றில் சோதிடம் என்றாலே, இராசி பலன் உரைப்பது என்றாகிவிட்ட காலத்தில், காலையில் எழுந்தவுடன் இராசி பலனைப் படிப்பதிலும், கேட்பதிலும் ஆர்வமுடன் இருப்பவர்கள் மத்தியில்சோதிடக் கருத்தை எதிர்ப்பவர்களும், என்னதான் சொல்கிறார்கள் அல்லது எழுதியிருக்கிறார்கள், பார்ப்போமே என நம்பாதது போல் நம்புகிறவர்களுக்கும் இடையே, இப்படித்தான் இராசிபலன் உரைக்கப்படுகிறது என்பதை பதிவு செய்வது, அட அவ்வளவுதானா என நினைக்கத் தோன்றும். அதுமட்டுமின்றி, சோதிடத்தினை தொழிலாக செய்யும் சோதிடர்கள் என் மீது கோபப்படவும் கூடும். தொழில் இரகசியத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டேன் என்பதால்.

இராசிபலன் என்பது எவ்வளவு சதவீதம் பலன் தரும் என்பதை, நான் ஏற்கனவேஇராசி பலனும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்எனும் பதிவில் தெரிவித்திருக்கிறேன். அதனாலேயே, புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, இராகு-கேது பெயர்ச்சி ஆகியவற்றின்போது, நான் அது தொடர்பாக எதுவும் எழுதுவது இல்லை. இராசிபலனின் பொதுப்பலன் என்பது 10 -15 சதவீதம் மட்டுமே பொருந்தக்கூடும் என்பதால் அதனைத் தவிர்த்து விடுகிறேன். ஏனெனில்அவரவர் சாதகம் அவரவர்க்கு”.

சரி, தலைப்பிற்கு வருவோம். அஷ்டக வர்க்கம் என்பது கோள்களின் நகர்வில் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி உரைப்பது எனப் பார்த்தோம். இராசி-பலன் என்பதும் கோள்களின் நகர்வின்போது ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி உரைப்பதுதான்.

கோள்களின் நகர்வின் பலன், இராசியின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகிறது. அதாவது, ஒருவரின் பிறந்த சாதகத்தின் இலக்கின அடிப்படையில் இல்லாமல், அவரது சந்திர இராசியின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, ஒருவர் மேச இலக்கனத்திலும், மகர இராசியிலும் பிறந்திருக்கிறார் என்றால், கோள்களின் நகர்வின் பலன் மகர இராசிக்குத்தான் கணிக்கப்படுகிறதுசந்திரன் ஒரு இராசியில் ஏறக்குறைய 2 ½ நாட்கள் இருக்கும். அதாவது, அந்த குறிப்பிட்ட 2 ½ நாட்களில் பிறந்த அனைவரும் மகர இராசிக்காரர்கள். எனவே மகர இராசிக்கு உரிய பலனானது அந்த குறிப்பிட்ட 2 ½ நாட்களில் பிறந்த அனைவருக்கும் பொதுவாக உள்ளது.

இந்த இராசி-பலனானது அஷ்டக வர்க்கத்தின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால், சந்திரனின் அஷ்டக வர்க்கத்தின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது.

சந்திரனின் அஷ்டகவர்க்கத்தில் சந்திரன் உட்பட ஏழு கோள்களும் தாம் இருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட வீடுகளில் நற்புள்ளிகள் வழங்கும் என பதிவு செய்துள்ளோம். எனவே, அத்தகைய கோள்கள் சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் நற்புள்ளிகள் வழங்கும் இடத்தில்  வரும்போது, நற்பலன்களும், பிற இடங்களில் வரும்போது கெடு பலன்களும் கொடுக்கும் என கணிப்பதே இராசி பலனாகும்.

எடுத்துக் காட்டாக சூரியனை எடுத்துக் கொள்வோம். சூரியனானது, சந்திரனின் அஷ்டக வர்க்கப்படி, சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து, 3, 6, 10, 11 ஆகிய நான்கு இடங்களில் நற்புள்ளிகள் வழங்கும், அதாவது நற்பலனைக் கொடுக்கும். பிற இடங்களில் கெடு பலனைக் கொடுக்கும் என்பதாகும். மேற்கூறிய எடுத்துக்காட்டின்படி, மகர இராசிக்காரர்களுக்கு, மகரத்திலிருந்து 3 (மீனம்), 6 (மிதுனம்), 10 (துலாம்), 11 (விருச்சிகம்) ஆகிய இடங்களின் சூரியன் வரும்போது நற்பலனையும், பிற இடங்களில் கெடு பலனையும் கொடுக்கும், என சோதிட நூல்கள் கூறுகின்றன.

இதன்படி, மகர இராசிக் காரர்களுக்கு, சூரியன் மீனத்தில் வரும்போது, இராசி-பலன் உரைப்பது இப்படி இருக்கும்:- “உடல் நிலையில் முன்னேற்றம், வருமானம் உயரும், பதவி உயர்வு கிடைக்கும்”.

இனி மகர இராசி காரர்களுக்கு, கோச்சார நிலையில் சூரியன் எங்கு நகர்ந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை, இராசி-பலனாக உரைக்கலாம்.

மகரத்தில்(1) – உடற்பிணி, மன வருத்தம் (கெடு புள்ளி)
கும்பத்தில்(2) – வருவாய் குறைவு, எதிர்பாராத இடஞ்சல்கள் (கெடு புள்ளி)
மீனத்தில்(3) – நல்ல உடல் நிலை, வருமான உயர்வு (நற்புள்ளி)
மேசத்தில்(4) – உடற்பிணி, குடும்பத்தில் குழப்பம் (கெடு புள்ளி)
ரிசபத்தில் (5) – கவலைகள், துன்பங்கள் (கெடு புள்ளி)
மிதுனத்தில்(6) – வருவாய் உயர்வு, மன நிறைவு (நற்புள்ளி)
கடகத்தில்(7) -  பணப் பிரச்சனை, குடும்பத்தில் கவலை (கெடு புள்ளி)
சிம்மத்தில்(8) – விபத்துக்கள், கவலைகள்(கெடு புள்ளி)
கன்னியில்(9) – எதிரியால் துன்பம், விரக்தி (கெடு புள்ளி)
துலாத்தில்(10) – நண்பர்களால் உதவி, வெற்றி (நற்புள்ளி)
விருச்சிகத்தில்(11) – இலாபம், அதிர்ஷ்டம், மரியாதை (நற்புள்ளி)
தனுசுவில்(12) – உடற்பிணி, வாக்குவாதங்கள்.

இது சூரியனின் நகர்வின் பலன் மட்டுமே. இதுபோலவே, பிறக் கோள்களின் நகர்வினை அவைகள் சந்திரனின் அஷ்டவர்க்கத்தில் கொடுக்கும் புள்ளிகளைக் கணக்கில் கொண்டு, பலன்கள் அறிந்து, பின்னர் அனைத்து பலன்களையும் ஒன்றினைத்து, இணைவுகள் தொகுப்புகள் (combination, permutation)  எனும் அடிப்படையில் கணித்து இராசி பலன் உரைக்கப்படுகிறது.

இராசிபலன் உரைப்பதற்கு இதுதான் அடிப்படை கணக்கீடு என்றாலும், தொகுப்பதில் ஏற்படும் குறைபாடுகளால், ஒரே நாளுக்கு உரிய இராசிபலன்கள் ஒவ்வொரு விதமாக நாளேடுகளிலும், ஊடகங்களிலும்  வழங்கப்படுகின்றன.

இராசிபலன் உரைப்பது அஷ்டகவர்க்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது என்பதால், இந்த பதிவினை அஷ்டகவர்க்கம் பற்றிய தொகுப்பில் செய்யவேண்டியதாயிற்று,

ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சாதக பலன் உரைப்பதற்கு, பிறந்த சாதகத்தின் இலக்கினம் தான் முதன்மையானது, அதுமட்டுமின்றை, அவரவர் சாதகம் அவரவர்க்கு,


அடுத்து .. பிருகத் ஜாதகத்தில் அஷ்டவர்க்கம்

No comments: