Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, January 21, 2018

சோதிடக் கணிதத்தில் இடர்பாடுகள்




சோதிடப் பலன் உரைத்தலில் அறிவியற்கணிதமான சோதிடம் எவ்வாறெல்லாம் இடர்பாடுகளைச் சந்திக்கிறது என்பதை சற்று கவனமாகவே விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டியுள்ளது.


சோதிடம் என்பது இரண்டு அடிப்படைக் கூறுகளைக் கொண்டது என்பதில் சோதிடர்களிடையே மாற்றுக் கருத்து இருப்பதில்லை. அவை,
1.   சாதகம் கணித்தல்
2.   பலன் உரைத்தல்

ஆனால் இந்த அடிப்படைக் கூறுகள் மிகச் சரியாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதில் பல்வேறு முரண்கள் இருக்கின்றன.


முதலில் சாதகம் கணிதல் என்பதை எடுத்துக் கொள்வோம். சாதகம் கணித்தல் என்பது நேரத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், எந்த நேரத்தினை எடுத்துக் கொள்வது எனும் போது முரண்கள் உருவாகின்றன.

1.   கரு உண்டாகும் நேரம்
2.   பிறக்கும் நேரம்
3.   தலை வெளியில் வரும் நேரம்

இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்தால், அடுத்து வரும் கேள்வி, எந்த பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிப்பது

1.   வாக்கியம் பஞ்சாங்கம்
2.   திருக்கணிதம் பஞ்சாங்கம்
3.   மேலை நாட்டு கணிதம்

இன்னும் தொடர்ந்தால், எந்த அயனாம்சத்தைக் கணக்கில் கொள்வது

1.   சூரிய சித்தாந்தம்
2.   லஹிரி
3.   கே.பி.
4.   இராமன்
5.   இது போன்ற இன்னும் பலவற்றில் ஒன்று

ஆக சாதகக் கணிதத்தின் அடிப்படைக் கணக்கிலேயே எதைத் தேர்வு செய்வது என்பதில் மாற்றுக் கருத்துக்களும், குழப்பங்களும் விரவிக் கிடக்கின்றன.

இதனை முடித்து அடுத்தக் கட்ட நகர்வான பலன் உரைத்தல் எனும் கணிதத்திற்கு வரும்போது அது இன்னும் சிக்கலான நிலையினை அடைகிறது. பலன் உரைத்தல் எனும் நிலைக்கு எதனை அடிப்படையாகக் கொள்வது எனும் கேள்வி. அதாவது, நமது முன்னோர்களும் சோதிட மேதைகளும் எழுதிவைத்துச் சென்ற பதிவுகளில் எதனைப் பயன்படுத்துவது.

1.   வராகமிகிரர்
2.   பராசரர்
3.   மந்திரேஸ்வரர்
4.   புலிப்பாணி
5.   கீரனூர் நடராசன்
6.   மற்றும் அக்கால சோதிட அறிஞர்கள்
7.   கிருஷ்ணமூர்த்தி, இராமன், கடலங்குடி சாஸ்திரி போன்ற சென்ற நூற்றாண்டின் அறிஞர்கள்
8.   அல்லது சோதிட நூல்கள் எழுதிவரும் தற்போதையவர்கள்
என பட்டியல் வெகுவாக நீள்கிறது.

அப்படியே யாரேனும் ஒருவரை எடுத்துக் கொண்டால் மற்றவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அந்த ஒருவரின் நூல் முழுமையான நூலாக உள்ளதா? அது போதுமானதா?

ஆக, இவற்றையெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. இவற்றை ஆராய முற்படும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அது இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. விருப்பு வெறுப்பின்றி ஆராய முற்படும்போது, சில உண்மைகளை அல்லது கருத்துக்களை பொதுவில் வைக்க வேண்டும் நிலை ஏற்படும். எதிர் கருத்தில் சிலருக்கு உடன்பாடு இல்லாமலும் போகும். ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து நம்பகத்தன்மையினை மேம்படுத்த வேண்டும்.

இனி வரும் பதிவுகளில் இவற்றை விவரமாக ஆராய்வோம்.

இன்னும் தொடர்வோம்.


No comments: