மீண்டும் வானியல் கோட்பாட்டிற்கு வருவோம்.
360 பாகைகள் கொண்ட வான்மண்டலத்தில், சூரியனும், சூரியனை மையமாகக் கொண்டு மற்ற கோள்களும்
சுற்றி வருவதாகப் பார்த்தோம். சூரிய மையக் கொள்கையாக இருந்தாலும் அல்லது பூமி மையக்
கொள்கையாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் சூரியனும் சந்திரனும் வரும்போது
இருள்நிலவு (அமாவாசை) ஏற்படுகிறது. அதே போல் அவை இரண்டும் நேர் எதிரே, 180 பாகைக் கோணத்தில்
இருக்கும்போது, முழு நிலவு (பௌர்ணமி) ஏற்படுகிறது. அதே போல், சூரியனுக்கும் சந்திரனக்கும்
இடையில் பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சந்திரகிரகணமும், பூமிக்கும் சூரியனுக்கும்
இடையில் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. ஆனால்
ஏன் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. ஏன் ஒவ்வொரு இருள்நிலவு
நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை.
அதற்குக் காரணம், பூமியின் 23.5 பாகை சாய்வுக்கோண
சுற்றுப்பாதைதான். நமக்கு எளிதாகப் புரிவதற்கு பூமி மையக் கொள்கையை எடுத்துக் கொள்வோம்.
பூமியைச் சூரியனும் சந்திரனும் நீள் வட்டத்தில் சுற்றிவருவதாகக் கொள்வோம். பூமியின்
சாய்வுக் கோணத்தால் இரண்டும் பூமியைச் சுற்றினாலும் அவைகளின் சுற்றுப் பாதையானது சற்று
விலகியே இருக்கிறது. ஆனாலும் அவைகளின் சுற்றுப்பாதை எங்கேனும் இரு இடங்களில் இணைந்து
பின்னர் விலகும் சூழலில் உள்ளன.
அவ்வாறன சூழலில், சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில்
இருந்தாலும், ஒரே புள்ளியில் இருப்பதில்லை. சற்று மேலும் கீழுமாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக,
கீழ்வரும் நிலைகளைப் பார்ப்போம். அனைத்துமே ஒரே பாகை (0 அல்லது 360 பாகை) எனக் கொள்வோம்.
மேலே உள்ள படத்தில் சூரியனும்(பெரியவட்டம்) சந்திரனும்(சிறியவட்டம்)
360 பாகையில்தான் உள்ளன. ஆனால், “ஈ” யில் மட்டும் இரண்டும் ஒரே புள்ளியில் உள்ளன. மற்றவற்றில்
ஒரே பாகையில் இருந்தாலும், ஒரே புள்ளியில் இல்லை. எனவே ஒரே புள்ளியில் இருப்பது என்பது,
ஒரு குறிப்பிட்ட காலச் சுற்றில் மட்டுமே ஏற்படும் என்பது தெளிவாகிறது. ஆனாலும், ஒவ்வொரு
நிலையிலும் இருள்நிலவு (அமாவாசை) ஏற்படுகிறது. இந்த ஒரே புள்ளி நிலை என்பது, 0 பாகைக்கு
நேர் எதிரான 180 பாகையிலும் (முக்கோணவியல் தேற்றம்) அதற்கேற்பவே ஏற்படும்.
இங்கு ஒரு கேள்வி எழலாம், ‘ஏன் பூமி மையக் கொள்கையைக்
கடைபிடிக்க வேண்டும்’, என்று. அமாவாசையையும், பௌர்ணமியையும், காலந்தொட்டே சூரிய நகர்வு,
சந்திர நகர்வு அடிப்படையில்தான் பூமியிலிருந்து நாம் கணக்கிட்டு வந்துள்ளோம். காட்சிப்பிழையின்
அடிப்படையில் அது மிகச்சரியாகவும் இருந்து வருகிறது.
இப்போது, சூரிய மையக் கொள்கையின்படி, இதனை நிறுவ
முயல்வோம். பூமியானது, சூரியனைச் சுற்றிவரும்
பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் பாதையும் வெவ்வாறனவை. இருப்பினும்
பூமியின் பாதையை ஒட்டியே சந்திரனனின் பாதையும் தொடர்ந்து வரும். அவ்வாறு வரும் பாதையானது,
ஒரு சுருள் வளையம் போல், பூமிப்பாதையை உள்வைத்து சுற்றிவரும்.
அந்தச் சுருள் வளையம் பூமியின் சாய்கோண விதியினால்,
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பூமிப்பாதையை வெட்டும். அதாவது வெட்டுதல் என்பது எப்போதும்
நிகழ்வதில்லை. அவ்வாறு வெட்டுப்படுவது, நேர் எதிரான 180 பாகையிலும் ஏற்படும். எனவே,
சந்திரன், பூமி, சூரியன் ஒரே பாகையில் வந்தாலும், வெட்டுதல் என்பது எப்போதாவதுதான்
நிகழும்.
அந்த ‘எப்போதாவது நிகழ்வது’ என்பது 18½ ஆண்டுகளுக்கு
ஒருமுறை நிகழ்வதை நமது வானியல் மேதைகள் கண்டறிந்தனர். அதாவது புவிமையக் கொள்கைப்படி,
சூரியப் பாதையை சந்திரனின் பாதை வெட்டுவது என்பது 18½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது.
அவ்வாறு வெட்டுதல் என்பது வடக்கே கடக ரேகைக்கு
அருகிலும் (தட்சினாயணம் – தென் நோக்கி நகர்தல் தொடங்கும் இடம்) தெற்கே மகர ரேகைக்கு
அருகிலும் (உத்திராயணம் – வட நோக்கி நகர்தல் தொடங்கும் இடம்) நிகழ்கிறது. மேலே வெட்டும்
புள்ளி மீண்டும் மேலே வெட்டுதலும், கீழே வெட்டும் புள்ளி மீண்டும் கீழே வெட்டுதலும்
- ஒரு சுற்று வருவதற்கு 18 ½ ஆண்டுகள் தேவைப்படுகிறது. இருப்பினும் அவ்வாறு வெட்டுதல்
இல்லாமல் அந்தக் கற்பனைப் புள்ளிக்கு அருகில் ஒட்டிச் செல்லுதல் என்பது ஆண்டுதோறும்
நிகழ்கிறது.
எனவே, அந்த, மேலே உள்ள கற்பனைப் புள்ளியானது,
360 பாகைகளைக் கடக்க 18½ ஆண்டுகளும், 30 பாகையைக் (ஒரு இராசியைக்) கடக்க 1½ ஆண்டுகளும்
தேவைப்படுகிறது. அதற்கு ஈடாக கீழே உள்ள புள்ளியும் அவ்வாறே நகர்கிறது.
மேலும் கீழுமாக (180 பாகையில்) உள்ள இந்த இரு
கற்பனைப் புள்ளிகளும் (அதாவது – சூரியன் – சந்திரன் – கற்பனைப் புள்ளி ஆகிய மூன்றும்
ஒரே நேர்க்கோட்டில் அமையும் காலத்தில்) சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படக்கூடிய
நாட்களைக் கணக்கிட பயன்படுகின்றன.
எனவே, இக் கற்பனைப் புள்ளிகளை நினைவில் கொள்ளும்
பொருட்டும், இவை கணக்கீடுகளைச் செய்வதற்கு தேவை என்பதாலும், இப்புள்ளிகளுக்கு கற்பனையாக
இட்ட பெயரே – இராகு மற்றும் கேது என்பதாகும். மேலே உள்ளப் புள்ளி இராகு என்றும், கீழே
உள்ளப் புள்ளி கேது என்றும் அழைக்கப்படுகின்றன. காட்சிப் பிழை அல்லது தோற்றப் பிழை
எனும் அடிப்படையில், இப்புள்ளிகள் சுற்றும் திசையானது சூரியன் – சந்திரன் சுற்றும்
திசைக்கு எதிர் திசை எனும் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இவை இரண்டும் கற்பனைப் புள்ளிகள் என்பதால், இவைகளைக்
கற்பனைக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் என்று அழைக்கின்றனர். இவை சுற்றுப்பாதையினை அடிப்படை
ஆதாரமாக் கொண்டிருப்பதால், வளைந்த கோட்டினை ஞாபகப் படுத்தும் விதமாக பாம்பினை உருவகப்படுத்தியுள்ளனர்.
மேலே உள்ளப் புள்ளியை ஞாபகப்படுத்த, அதனை மனித தலையுள்ள பாம்பு (இராகு) எனவும், கீழே உள்ளப்
புள்ளியை ஞாபகப்படுத்த, அதனை வாலுள்ள பாம்பு (கேது) எனவும் குறிப்பிட்டுள்ளனர். புராணக்கதைகளில்
வரும் இராகுவும் கேதுவும் கற்பனையே. அவை ஞாபகம் வைத்துக்கொள்ள உதவும் ஒரு குறியீடு
அவ்வளவுதான்.
எனவே, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்றுப்பாதைகள்
வெட்டிக் கொள்ளும் புள்ளிகளே இராகுவும் கேதுவும் ஆகும். இவை கடிகாரச் சுற்றிற்கு எதிர்
திசையில் நகர்கின்றன.
இவற்றின் முக்கியத்துவம் கருதி, இவைகளைச் சோதிடத்தில்
கோள்களாகக் கணக்கிடுகின்றனர். ஆனாலும், இராசிச் சக்கரத்தில் இவைகளுக்கு இட ஒதுக்கீடு
அளிக்கப்படவில்லை. இப்புள்ளிகளின் தாக்கம் அதாவது சுற்றுப்பாதையின் விலகல் அளவு கோள்களிடையே
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சோதிடத்தில் இவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை எளிமையாக, இராகு கேது எனும் கற்பனைக்
கோள்கள் பற்றி எழுதியிருக்கிறேன். புரிவதற்கு சிரமமாக இருந்தால் தொடக்கத்திலிருந்து
மீண்டும் படியுங்கள். புரியும்.
No comments:
Post a Comment