Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, December 18, 2017

சோதிடம் - வரையறைக்குள் அடங்காத வரையறைக் கணிதம்




தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாகத்தான் நான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். வேதாளமும் என்னை எள்ளி நகையாடிக் கொண்டுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக எழுத நினைத்தாலும், பல்வேறு பணிகளும், எதிர்பாரா தடைகளும், ஆய்வினைத் தொடர்வதில் மேலே அமர்ந்து மெல்லழுத்தம் செய்கின்றன. பிருகத் ஜாதகம் மொழியாக்கம் முடிந்தபின்பு, ஆய்வினைத் தொய்யலின்றி தொடங்க முற்பட்டாலும், தொய்வு வழக்கமாகி விடுகிறது.

மீண்டும் ஆய்வினைத் தொடர்வதற்கு முன், இதுவரையில் தொடர்ந்ததை நினைவு கூறுவோம்.

முன்னுரையில் தொடங்கி, வானியலைத் தொட்டு, பிரபஞ்சம், சூரியக் குடும்பம், அதிலுள்ள கோள்கள், அவற்றின் இயல் தன்மைகள் ஆகியவற்றைப் பதிவு செய்தோம். பின்னர் சோதிடம் தோன்றிய காலங்கள், சோதிடத்தில் கணக்கிடப்படும் கோள்கள், சோதிடத்தில் வானியல் கோட்பாடுகள் ஆகியவற்றினையும் பதிவு செய்தோம். சோதிடத்தின் அடிப்படைக் கொள்கையான பூமி மையக் கொள்கையினையும் வானியலின் அடிப்படையான சூரிய மையக் கொள்கையினையும் ஒப்பு நோக்கி, அடிப்படையில் இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் வேற்றுமைகளை பகுத்தறிந்தோம்.

பின்னர் சோதிடத்தின் வான் மண்டலம் எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது. இராசிகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதையும், குறிப்பாக, நிழல் கோள்கள் என சோதிடர்களால் அழைக்கப்படும் இராகு-கேது எனும் இரு கோள்கள் உண்மையில் நிழல் கோள்கள் எனும் நிலையிலும் இல்லை என்றும், அவை சூரிய-சந்திர சுற்றுப்பாதையின் வெட்டுப்புள்ளிகள் என்பதையும் அவைகள் ஏன் கடிகார எதிர்சுற்றில் கணக்கிடப்படுகின்றன என்பதையும் விரிவாகப் பார்த்தோம்.

ஒவ்வொரு கோளும் இராசிகளில் நகரும் கால அளவு, வக்கிரம் எனப்படும் பின்னோக்கி நகர்வு, ஏன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் வக்கிரம் இல்லை என்பதையும் பதிவு செய்தோம்.

இராசிகளை பல்வேறு வகைகளில் பிரித்து, ஐம்பூதத் தன்மை, உடல் ஒதுக்கீடு, பாலினம், நிலைத்தன்மை, எண்கள், திசைகள், பகல்-இரவு, விழித்திருத்தல் போன்று சோதிடத்தில் பயன்படுத்தப்படும் நிலைகளை ஆராய்ந்தோம்.

இலக்கினம் என்றால் என்ன? என்பதை சோதிட நிலையிலிருந்து விலகி, வானியல் நிலையில் ஆராய்ந்து, வரையறை செய்தோம். இரு சாதகங்கள் ஒன்றுபோல் இருக்குமா? இரட்டைப் பிறவிகளின் சாதகங்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆராய்ந்தோம்.

பின்னர், சோதிடப்பயன்பாட்டின் இதர தலைப்புகளிலும் ஆய்வினைச் செய்தோம். அவை,

இராசிக் கட்டங்கள் - வர்க்கக் கட்டங்கள்
இராசி-  பாவகம்
சோதிடத்தில் வரையறைகள் -  தேற்றங்கள்
பன்னிரெண்டு வீடுகளின் வரையறைகள்
கோள்களின் சோதிட வரையறை
கோள்களின் நிலைஆட்சி, உச்சம், நீச்சம், மூலத் திரிகோணம், நட்பு-பகை, பார்வைகள், வலிமை
அஷ்டவர்க்கம்அடிப்படைபுள்ளிகள்
தசா புத்திகள்காலமுறைக் கணிதம்
சட் பலம்.
இவற்றோடு மிக முக்கியமாக சோதிடக் கணக்கீட்டில் பயன்படும் பஞ்சாங்கங்களான வாக்கியம்திருக்கணிதம் இரண்டிற்கும் இடையே உள்ள கணித முரண்கள் பற்றியும் விரிவாக ஆராய்ந்தோம்.

மேற்கூறியவை அனைத்தும் பொதுவில் ஒரு கணித அடிப்படையில், [மெய்ப்பிக்க இயலாத ஒரு சில முரண்பாடுகள் இருப்பினும்], குறிப்பாக வானியல் கணித அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுள்ளன.

சோதிடம் பொய் என்று கூறுபவர்கள்கூட, இக்கணித முறைகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. இவை வானியல் சார்ந்த அறிவியல் என்பதிலும் தயக்கமில்லை.

ஆனால் சோதிடம் அறிவியாலா? புனைவியலா? அல்லது உண்மையா? பொய்யா? எனும் கேள்வி எங்கு எழுகிறது எனில், அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்யும், பலன் உரைத்தல் எனும் நிலையில்தான்.

ஏனெனில் சோதிட பலன் உரைத்தலுக்கு பயன்படுத்தப்படும் கணித முறையானது வரையறைக்குள் அடங்காத வரையறைக் கணிதம்” (Defined mathamatics in undefined mathematics) எனும் முரண்தொடராக இருப்பதுதான்.


மேலும் தொடர்வோம்.




No comments: